ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமுக்கு பிரம்மாண்ட நினைவு மண்டபம்... ராணுவப் பொறியாளர்கள் ஆய்வு
ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சமாதி வளாகத்தில் அறிவுசார் மையம், கண்காட்சி உள்ளிட்ட பணிகள் தொடங்குவதற்காக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர்.
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு என்ற இடத்தில் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள கலாம் சமாதிக்கு, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது சேவைகளை, இளைய தலைமுறையினர் அறிந்திடும் வகையில் மத்திய அரசு கலாம் குறித்து கண்காட்சி, அறிவுசார் மையம் அமைப்பது உள்பட பல்வேறு திட்டப்பணிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்பேரில், அப்பகுதி வளாகத்தை பார்வையிடுவதற்காக டெல்லியிலிருந்து ராணுவத் துறையின் பொறியியல் பிரிவின் கூடுதல் இயக்குநர் மாலா மோகன், முதன்மை பொறியாளர் ஆர்.கே.கவுண்டல், சென்னை பகுதியிலுள்ள இந்திய ராணுவத் துறையின் பொறியியில் பிரிவு செயற்பொறியாளர் ராஜா மகேந்திரரெட்டி ஆகியோர் ராமேசுவரம் பகுதியிலுள்ள அப்துல்கலாம் வீட்டிற்கு வந்தனர்.
பின்னர், கலாம் அண்ணன் ஏ.பி.ஜே. முகமது முத்துமீரா லெப்பை மரைக்காயர் அவரது மகன் ஜெயினுலாபுதீன் மரைக்காயர் மற்றும் பேரன் சேக் சலீம் ஆகியோரை சந்தித்து கலாம் சமாதி அமைந்துள்ள வளாகத்தில் நடைபெறவுள்ள திட்டப்பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். அதன் பின்னர் அப்துல் கலாம் சமாதி அமைந்துள்ள வளாகத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, இந்திய ராணுவத் துறையின் பொறியியல் பிரிவின் கூடுதல் இயக்குநர் மாலா மோகன் செய்தியாளர்களிடம் கூறியது: அப்துல் கலாம் சமாதி அமைந்துள்ள வளாகத்தில் அறிவுசார் மையம், கண்காட்சி மற்றும் நூலகம் அமைக்கப்படவுள்ளது.
கலாம் சமாதி அமைந்துள்ள இடம் 2 ஏக்கர் 50 சென்ட் உள்ளது. மேலும், இந்த திட்டங்கள் நிறைவேற்ற 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ஆதலால் இந்த இடங்களை மாநில அரசிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. மாநில அரசு வழங்கியவுடன் கட்டுமானம் குறித்த வரைவுத் திட்டப் பணிகள் தொடங்கப்படும். என தெரிவித்தார்.