சென்னையில் மீட்புப் பணிகளில் விமானப் படை ஹெலிகாப்டர்கள், ராணுவம்
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய ராணுவமும் விமானப் படையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இது குறித்து இந்திய விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் விங் கமாண்டர் ரோச்செல் டி சில்வா ஒன் இந்தியா தமிழ் இணையத்தளத்திடம் பேசுகையில்,
நேற்று விமானப் படையின் சீட்டா ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அசோக் நகர் முடிச்சேரி பகுதியில் வெள்ளத்தால் சூழப்பட்ட இடங்களில் இருந்து 12 குழந்தைகள், 6 பெண்கள் உள்பட 22 பேரை மீட்டது. இன்றும் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம். தாம்பரம் விமானப் படை மையத்திலிருந்து இந்த ஹெலிகாப்டர் இயக்கப்பட்டது.
மேலும் நகரின் பல பகுதிகளிலும் உணவு பொட்டலங்களும் குடிநீரும் ஹெலிகாப்டரில் இருந்து போடப்பட்டன என்றார்.
இந் நிலையில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கும் பணியில் இந்தப் பிரிவு ஈடுபட்டுள்ளது என்றனர்.