கத்தினா குத்துவேன்.. குத்துனா கத்துவேன்.. களியக்காவிளை பஸ் ஸ்டாண்ட்டில் ஒரு பரபரப்பு
சந்தையில் பொதுமக்களை மிரட்டிய ராணுவ வீரரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி: கத்தினா குத்திடுவேன்... குத்தினா கத்திடுவேன்... இது களியக்காவிளை மார்க்கெட்டில் நடந்த கூத்து.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரளா எல்லை பகுதி களியக்காவிளை ஆகும். இரு மாநிலங்களை இணைக்கும் பகுதி என்பதால் இங்குள்ள பஸ் நிலையம் எப்போதும் கூட்டம் நிறைந்து வழியும். எப்போதுமே கூட்டம் ஜேஜே என இருக்கும்.
தள்ளி நிப்பாட்டுப்பா
நேற்று ஒரு இளைஞர் பைக்கில் கடைப்பகுதிக்கு வந்தார். பைக்கை கடை ஒன்றின் முன் நிறுத்திவிட்டு அதே கடைக்கு பொருள் வாங்க சென்றார். கடையை தன் கடைமுன்னாடியே நிறுத்திவிடவும், கடைக்காரருக்கு கோபம் வந்துவிட்டது. "கடைக்கு முன்னாலேயே இப்படி கொண்டு வந்து நிறுத்தினா எப்படி? மத்த கஸ்டமர்கள் எல்லாம் எப்படி கடைக்குள்ளே வருவார்கள், பைக்கை எடுத்து தள்ளி நிப்பாட்டுப்பா.." என்றார்.
கத்தியை காட்டிய இளைஞர்
ஆனால் கடைக்காரர் சொன்னதை அந்த இளைஞர் காதிலேயே வாங்கி கொள்ளவில்லை. அதனால் தொடர்ந்து கடைக்காரர் இளைஞரிடம் சத்தம் போடவும், தகராறு ஆரம்பமானது. வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில் அந்த இளைஞர் திடீரென தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கடைக்காரரை மிரட்டினான். மூச்சை பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்த கடைக்காரர் இப்போது கப்-சிப்பென்று ஆனார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் இளைஞரை மடக்கி பிடிக்க முயன்றனர்.
போலீசில் ஒப்படைப்பு
ஆனால் அசராத இளைஞர் "யாராவது கிட்ட வந்தா குத்திடுவேன்" என்று பொதுமக்களையும் மிரட்ட தொடங்கினார். பின்னர் சிலரை துரத்திக் கொண்டு பின்னாலேயே கத்தியை தூக்கி கொண்டு குத்துவதற்கு இளைஞர் ஓடினார். இதனால் மக்கள் தலைதெறிக்க ஓடினார்கள். பஜாரே ரணகளமாகிவிட்டது. ஆனால் அதையும் மீறி ஒருசிலர் அந்த இளைஞரை லபக்கென்று பாய்ந்து அமுக்கி பிடித்தனர். இளைஞரை இழுத்துக் கொண்டுபோய் களியக்காவிளை போலீசிலும் ஒப்படைத்தனர்.
ராணுவ வீரராம்
அந்த இளைஞர் களியக்காவிளை அருகில் உள்ள மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் என்பதும் பெயர் அனீஷ் என்பதும் தெரியவந்தது. ஆனால் இதைவிட முக்கிய விசாரணை தகவல், இவர் ஒரு ராணுவ வீரராம். விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளாராம். தொடர்ந்து இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.