ஆக்கிரமிப்புகளை அகற்றி பெயர் எடுத்த டிஎஸ்பி ஜெரினா... வயலை அழித்து பெயரை கெடுத்துக்கிட்டாரே?
ஆரணியை அடுத்த காமக்கூரில் நன்கு விளைந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழிக்க அனுமதி அளித்த டிஎஸ்பி ஜெரினா பேகம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Recommended Video
ஆரணி: ஆரணியை அடுத்த காமக்கூரில் இரு தரப்பினரிடையே பிரச்சினைக்குரிய இடத்தில் நன்கு விளைந்திருந்த நெற்பயிர்களை டிராடக்டர் மூலம் ஒருவர் அழித்ததை வேடிக்கை பார்த்த டிஎஸ்பி ஜெரினா பேகம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஆரணியை அடுத்த காமக்கூரை சேர்ந்த சாவித்திரி என்பவருக்கும், சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. இது தொர்பான வழக்கு ஆரணி நீதிமன்றத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த பிரச்சினைக்குரிய நிலத்தில் சாவித்திரி நெற்பயிர் வைத்துள்ளதாக சாமுண்டீஸ்வரி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஒரு சாராருக்கு ஆதரவு
இந்த விவகாரத்தில் போலீஸார் புகார் அளித்த சாமுண்டீஸ்வரிக்கு ஆதரவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆரணி டிஎஸ்பி ஜெரினா பேகம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
டிராக்டரின் குறுக்கே படுத்த பெண்
டிஎஸ்பி இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோதே சாமுண்டீஸ்வரியின் உறவினர் டிராக்டரை விவசாய நிலத்தில் இறக்கி விளைந்த பயிர்களை அழித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சாவித்திரி ஓடி சென்று டிராக்டரின் குறுக்கே படுத்துக் கொண்டார்.
விவசாயி குற்றச்சாட்டு
இதுகுறித்து சாவித்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், நானும் சாமுண்டீஸ்வரியும் உறவினர்கள். எங்களுக்குள் நில பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் நாங்கள் எங்கள் உயிராக நினைத்த பயிர்களை எதிர் தரப்பினர் டிராக்டர் கொண்டு அழித்தனர். இதை தடுக்காத டிஎஸ்பி வேடிக்கை பார்த்தார். இதனால் நாங்கள் வேதனைப்படுகிறோம் என்றார்.
பயிரை அழிக்கக் கூடாது
புறம்போக்கு நிலமாகவே இருந்தாலும் விளைந்த பயிரை அழிக்கக் கூடாது என்று கூடவா இந்த டிஎஸ்பிக்கு தெரியாது. பயிரை அழிப்பதும் உயிரை அழிப்பதற்கு சமம் என்று சட்டம் கூறுகிறது. இதை சட்டம் ஒழுங்கு படித்தவர்களே மீறுவது அதிர்ச்சி அளிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆரணி டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெரினா பேகம் 40 ஆண்டுகால
சாலை ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண அதிரடியாக நடவடிக்கை எடுத்தார். அகற்றப்பட்டவுடன் மீண்டும் வியாபாரிகள் கடை வைத்தால் அவர்களுக்கு முதல் கட்டமாக ரூ.1000 முதல் ரூ. 5000 வரை அபராதம் விதிப்பது என்று உத்தரவிட்டுள்ளார். இத்தகைய கடும் நடவடிக்கைகளால் ஜெரினா பேகத்துக்கு நற்பெயர் கிடைத்தது. அந்த பெயரை அவர் ஒரே நாளில் கெடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.