நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு: தமிழகத்தில் 88,000 பேர் எழுதினர்!
இளங்கலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது
சென்னை: இளங்கலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் 88000 பேர் இந்த தேர்வை எழுதினர்.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 8 நகரங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 88 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதினர்.
நாடுமுழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர். நாடுமுழுவதும் 123 நகரங்களில் 2200 மையங்களில் தேர்வு நடை பெற்றது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூரில் இந்த தேர்வு நடைபெற்றது. இதற்காக, 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
10 மொழிகளில் எழுதினர்
நாடு முழுவதும் 104 நகரங்களில் 1,500க்கும் அதிகமான மையங்களில் தேர்வு நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, அசாமி, ஒரியா ஆகிய 10 மொழிகளில் இந்த தேர்வை எழுதினர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது.
ஜூன் 8ல் ரிசல்ட்
இந்த தேர்வு முடிவுகள் ஜூன் 8ம் தேதி வெளியாகும் என தெரிகிறது. தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மத்திய அரசு 15 சதவீத இடங்களுக்கும், மாநில அரசுகளின் மருத்துவ கல்வி இயக்ககங்கள் 85 சதவீத இடங்களுக்கும் கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்
நகைகள் அணியவும் தடை
மாணவர்கள் அரைக்கை சட்டை, பேன்ட் அணியவும் மாணவிகள் சுடிதார் அணிந்து வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தெரியாமல் முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்கள் முழுக்கை சட்டையை கத்தரித்து போட்டுக்கொண்டனர்.
சிபிஎஸ்இ- அதிக கேள்விகள்
தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்தே அதிக கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவித்தனர். தமிழகத்தில் முதல் முறையாக நடைபெற்ற தேர்வு என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.