7 பேரையும் முதல்வர் விடுதலை செய்வார்; அனைவருக்கும் நன்றி- அற்புதம் அம்மாள்
சென்னை: பேரறிவாளன் உள்பட ராஜீவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 25 ஆண்டுகாலமாக சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். கட்சி பேதமின்றி பேரணியில் பங்கேற்ற அனைவரும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரணி நடைபெற்றது. பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சத்யராஜ், உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்கிய இந்த பேரணி தலைமைச் செயலகம் வரை சென்று முடிவடைந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம் அம்மாள், தன்னுடைய அழைப்பை ஏற்று பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அரசியல் கட்சியினர், திரைப்படத்துறையினர், தமிழ் ஆர்வலர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் வந்து 7 பேர் விடுதலைக்காக குரல் கொடுத்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
வேலூரில் தொடங்கி சென்னை கோட்டையில் பேரணி முடிவதாகத்தான் திட்டமிட்டோம். 3 மாவட்டங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் வேலூரில் பேரணி தொடங்க முடியாது. வேறு ஏதேனும் மாற்றத்துடன் திட்டமிடுங்கள் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். அதனடிப்படையில் சென்னை எழும்பூரில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது.
பேரறிவாளன் உட்பட 7 பேரும் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளன் பிரிவை வார்த்தைகளால் விளக்க முடியாது. தற்போது எல்லோருக்கும் 7 பேர் விடுதலையாக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் பேரறிவாளன் ஒரு முறை கூட பரோலில் வெளிவரவில்லை. இளமைக்காலம் முழுவதும் பேரறிவாளனுக்கு சிறையிலேயே போய் விட்டது. இப்போது நோயாளியாக வெளியே வரப் போகிறான். எங்கள் வீட்டிலும் நாங்கள் நோயாளிகளாகி விட்டோம். இது முதல்வர் அம்மாவிற்கும் தெரியும்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலையாகி வெளியே வர வேண்டும். அவர்களுக்கென்று வாழ்க்கை இருக்கிறது. இனி எஞ்சியுள்ள நாட்களையாவது அவர்களின் குடும்பதினருடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறோம் என்று கூறினார்.
தொடர்ந்து அற்புதம்மாள் உள்ளிட்ட நான்கு பேர் மட்டும் தலைமை செயலகத்தினுள் சென்று முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அற்புதம் அம்மாள், 7 பேரை விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 முறை நடவடிக்கை எடுத்தார். அது, தடைபட்டு நிற்கிறது.
இப்போது பேரணி நடத்தி நாங்கள் மனு அளித்திருக்கிறோம். இது முதல்வரின் பார்வைக்கு விரைவில் செல்லும். இந்த முறை 7 பேர் விடுதலைக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறையில் உள்ள உள்ள தனது மகன் ஒவ்வொரு விநாடியும் தனது விடுதலையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.