பேரறிவாளனுக்கு பரோல்… சட்டசபையில் குரல் கொடுத்த எம்எல்ஏக்களுக்கு நன்றி.. அற்புதம் அம்மாள் உருக்கம்
சிறையில் 26 ஆண்டுகளாக இருக்கும் பேரறிவாளனுக்கு உடல் நலமில்லாத தந்தையை பார்க்க பரோல் வழங்க சட்டசபையில் கோரிய எம்எல்ஏக்களுக்கு அற்புதம் அம்மாள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் பேரறிவாளன். அவருக்கு பரோல் வழங்குவது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர சபரநாயகர் தனபாலிடம் எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் மனு அளித்தனர்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் கூறியதாவது: சட்டசபையில் பேரறிவாளனுக்காக பரோல் கேட்டு குரல் கொடுத்த தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோருக்கு நன்றி.
நான் இப்போது பேரறிவாளனுக்கு பரோல்தான் கேட்கிறேன். என் கணவர் உடல் நலமில்லாமல் இருக்கிறார். அதனால் உடனடியாக பரோல் கொடுக்க வேண்டும். வயதான காலத்தில் எங்களுடன் எங்கள் மகன் இருக்க வேண்டும் என்று போராடுகிறேன்.
மாநில அரசின் உரிமை
பரோல் அளிப்பது மாநில அரசின் உரிமை. இதனை இந்த அரசு கவனத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு பரோல் கொடுக்க வேண்டும். 26 ஆண்டுகளுக்கு முன் இதோ அனுப்பிவிடுகிறேன் என்று கூட்டிப் போனார்கள். இன்னும் வரவில்லை.
7 பேர் விடுதலை
ஜெயலலிதா பேரை சொல்லி ஆட்சி நடத்தும் இந்த அரசு 7 பேர் விடுதலையை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் வெளியே வர வேண்டும். என்று அற்புதம் அம்மாள் கூறினார்.
பரோல் மறுப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 21 வயதில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். உடல் நலமில்லாமல் இருக்கும் அவரது பெற்றோரை பார்க்க பரோல் கோரிய போது, சிறைத்துறை அதனை மறுத்துவிட்டது.
சட்டசபையில் குரல்
இதுகுறித்து எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் சட்டசபையில் குரல் கொடுத்தனர். மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சட்டசபையில் முன் வைக்கப்பட்டது.