விடுதலை செய்ய முடியாதா? பேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள்- அற்புதம்மாள் கதறல்
பேரறிவாளனை கருணை கொலை செய்து விடுங்கள் என்று அவரது தாய் அற்புதம்மாள் உருக்கமாக தெரிவித்தார்.
சென்னை: தனது மகன் பேரறிவாளனை விடுவிக்க முடியாவிட்டால் அவரை கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று தாய் அற்புதம்மாள் மிகவும் உருக்கமாக தெரிவித்தார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார். அப்போது அவர் மனித வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 27 ஆண்டுகளாக பேரறிவாளன், ரவிச்சந்திரன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்கள் சிறையில் இருந்து வருகின்றனர்.
இரு மாதங்கள் பரோல்
பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அதை மத்திய, மாநில அரசுகள் இதுவரை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவருடன் இருப்பதற்காக பேரறிவாளனுக்கு இரு மாதங்கள் பரோல் வழங்கப்பட்டது.
தமிழக சட்டசபையில் தீர்மானம்
இதனிடையே பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.
ஜனாதிபதி நிராகரிப்பு
இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த தீர்மானத்தை நிராகரித்தார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையை ஏற்றே ஜனாதிபதி இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கருணை கொலை செய்யுங்கள்
தன் மகனை தான் வாழ்நாளில் பார்ப்பேனா மாட்டேனா என அண்மையில் உருக்கமாக கூறியிருந்த தாய் அற்புதம்மாள் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் என் மகனை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கைவிரித்துவிட்டன. மாநில அரசும் இந்த விவகாரத்தில் செம்மையாக செயல்படவில்லை.
கருணை கொலை
என் மகன் வீட்டுக்கு வந்துவிடுவான் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னிடம் உறுதி அளித்தார். 27 ஆண்டுகளாக சிறையில் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இனிமேலும் அவர் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. எனவே மத்திய மாநில அரசுகளே பேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள். அதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதவுள்ளேன் என்றார்.