பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காக அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் வலியுறுத்திய அற்புதம்மாள்!
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரம் குறித்து வலியுறுத்துவதற்காக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தை சந்தித்தார் அற்புதம்மாள்.
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டத் துறை அமைச்சர் சிவி. சண்முகத்தை அற்புதம்மாள் சந்தித்து பேசினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதியன்று சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது படுகொலை செய்யப்பட்டார்.
விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தான் நிரபராதி என்றும், உச்சநீதிமன்றத்தின் அந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பை திரும்ப பெற முடியாது என்றும் ராஜீவ் கொலையில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்ற கூற முடியாது என்றும் கூறிய உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் பேரறிவாளனை விடுதலை செய்யவும் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அமைச்சர் சி.வி. சண்முகத்துடன் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசியதாக அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்பே விடுதலை குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.