மதனை கைது செய்யாத போலீஸ் கமிஷனருக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்- அக். 6 கடைசி கெடு!
சென்னை: மாயமான வேந்தர் மூவிஸ் மதனை கைது செய்யாத சென்னை போலீஸ் கமிஷனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மதனை அக்டோபர் 6-ந் தேதிக்குள் கைது செய்ய வேண்டும் என்று இறுதி கெடுவையும் விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
வேந்தர் மூவிஸ் மதன் கடந்த மே மாதம் தலை மறைவானார். இவரை கண்டு பிடித்து ஆஜர்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதனின் தாயார் தங்கம் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதே போல் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி மதன் ரூ. 72 கோடி வரை மோசடி செய்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தரப்பிலும் தனியாக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஒரு வார கெடு
இந்த வழக்கை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் ராதா கிருஷ்ணனை சிறப்பு அதிகாரியாக நியமித்து நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த 15-ந் தேதி நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாயமாகியுள்ள மதன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை ஒரு வாரத்துக்குள் கைது செய்து ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
மதன் கைது இல்லை
மதனை கைது செய்வதற்கு நீதிமன்றம் வழங்கிய கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் மதன் கைது செய்யப்படவில்லை.
போலீஸுக்கு கடும் கண்டனம்
இதனிடையே இன்று மதன் மாயமான வழக்கு மீது மீண்டும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, மதனை போலீசார் கைது செய்யாததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மதனை கைது செய்யாத சென்னை போலீஸ் கமிஷனர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
இறுதி கெடு
அப்போது அரசு தரப்பில் மதனை கைது செய்ய இறுதி கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் 6-ந் தேதிக்குள் மதனை கைது செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் இறுதி கெடு விதித்து உத்தரவிட்டனர்.