ஜெ.,அவதூறு வழக்கு: விஜயகாந்த், பிரேமலதாவிற்கு திருப்பூர் கோர்ட் பிடிவாரண்ட்
திருப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு உத்தரவிட்டார். 2015ல் நவம்பர் 6ல் பல்லடம் பொதுக்கூட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.
திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில் சித்த மருத்துவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் பல்லடம் காளிவேலம்பட்டி பிரிவு அருகில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம்தேதி நடந்தது.
இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது தமிழக அரசு பற்றியும், முதல்வர் ஜெயலலிதா பற்றியும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் திருப்பூர் மாவட்ட அரசு வக்கீல் கே. என்.சுப்பிரமணியம் திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், பல்லடம் காளிவேலம்பட்டி பிரிவு அருகில் தே.மு.தி.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாகவும், அவமதிக்கும் வகையிலும் பேசியதாகவும்,அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டமாவட்ட முதன்மை மற்றும்அமர்வு நீதிபதி(பொறுப்பு) முகமது ஜியாவுதீன், விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும், இதுதொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் விஜயகாந்தும், பிரேமலதாவும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், இருவரும், 4 முறை விசாரணைக்கு ஆஜராகாததால் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு உத்தரவிட்டார்.