ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய ஆயிரத்திற்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ சார்பில் நிலுவையில் உள்ள அவர்களது சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட உடனேயே அவர்களை அழைத்து அரசின் சார்பில் பேசி தீர்வு காண முயன்றிருக்க வேண்டும்.
அதற்கு மாறாக முன்கூட்டியே பல மாவட்டங்களில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்து போராட்டத்தை நசுக்க அரசு எடுத்த முயற்சி கண்டனத்திற்குரியது. அதையும் தாண்டி, இன்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டிய பிரச்சினைகளுக்கு காவல் துறையை பயன்படுத்தி கைது, வழக்கு என்று தமிழக அரசு பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்துவது கண்டனத்திற்குரியது. நேற்றும், இன்றும் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
அதேபோல, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்விற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.