ஆர்கே நகரில் 450 பேருக்கு ரூ. 20 டோக்கன்... போலீசில் சிக்கியவர் ஒப்புதல் வாக்குமூலம்!
சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் வாக்காளர்களுக்கு டோக்கனாக ரூ. 20 என 450 பேருக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதை போலீசிடம் சிக்கிய நபர் ஒப்புகொண்டுள்ளார்.
Recommended Video
சென்னை : ஆர்கே நகரில் நடந்த நூதன பணப்பட்டுவாடாவில் 450 பேருக்கு டோக்கனாக ரூ. 20 வழங்கப்பட்டது உண்மை தான் என்று போலீசில் சிக்கிய நபர் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகருக்கு நடந்த தேர்தலில் கடைசி கட்டத்தில் வாக்காளர்களைக் கவர 20ம் தேதி நள்ளிரவு வாக்காளர்களுக்கு ரூ. 20 நோட்டை டோக்கனாக கொடுத்து ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா தினகரன் தரப்பு உறுதி அளித்துள்ளதாக பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் கூறி இருந்தார்.
தினகரன் வெற்றி பெற்றால் 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்று வாக்காளர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிந்த பின்னரும் மக்கள் பணம் கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர்.
தினகரன் ஆதரவாளர்களுக்கு நச்சரிப்பு
20 ரூபாய் நோட்டை கொடுத்த கையோடு அதில் உள்ள சீரியல் எண்களையும் தினகரன் ஆதரவாளர்கள் குறித்து சென்றதாக கூறப்படுகிறது. தினகரன் தேர்தலில் வெற்றி பெற்றதால் டோக்கன் வாங்கிய மக்கள் குஷியாகினர். இதனையடுத்து டோக்கன் பணம் கொடுத்தவர்களை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டுள்ளனர்.
காத்திருக்கும் மக்கள்
சிலர் இரண்டு நாட்களில் தருவதாக சொன்னதோடு, சிலர் மொபைல் போனை எல்லாம் ஆப் செய்து விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. இருப்பினும் பலர் நம்பிக்கையோடு அந்த 20 ரூபாய் நோட்டை செலவு செய்து விடாமல் பொக்கிஷமாக வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
தரவில்லை என தகராறு
இதனிடையே புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தினகரனின் ஆதரவாளராக ஜான் பீட்டரிடம் தனக்கு ஏன் 20 ரூபாய் தரவில்லை என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் கார்த்திகேயன் தாக்கப்பட்டதாக போலீசிடம் புகார் அளித்துள்ளார்.
450 பேருக்கு வழங்கியதாக ஒப்புதல்
இந்த புகாரின் பேரில் ஜான்பீட்டர், சரண்ராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது ஜான் பீட்டர் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 450 பேருக்கு 20 ரூபாய் நோட்டு கொடுத்துள்ளதை ஒப்புகொண்டுள்ளார். மேலும் அடுத்தடுத்த வரிசை எண்களைக் கொண்ட ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.