அது ஒரு 'மிசா' காலம்... ஸ்டாலின் நினைவலைகள்
சென்னை: மிசா காலத்தில் நான் அனுபவித்த சிறை வாழ்க்கை எனக்கு மிகப் பெரிய அரசியல் பாடங்களை கற்றுக் கொடுத்தது. ஆனால், அதற்காக நான் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது என்று தனது மிசா கால அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பலரும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தன்னுடைய மிசா கால நினைவுகளைப் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்டாலின்.
சிறையில் 3 மாதங்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தோம். சிட்டிபாபு அன்று என் மீது அடி விழாமல் தடுத்ததால் தான் இன்று உயிருடன் இருக்கிறேன். இல்லையென்றால் நான் இருந்திருக்க மாட்டேன். நெருக்கடி நிலைக்காக நான் கைதாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
நெருக்கடி நிலை
அது நெருக்கடி நிலை அமலில் இருந்த காலம். அப்போது நான் மதுராந்தகத்தில் திமுக இளைஞரணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன். அந்த வேளையில் என்னைத் தேடி போலீஸார் என் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
1976 பிப்ரவரி 1ல் கைது
மிசா சட்டத்தின் கீழ் என்னை கைது செய்ய வந்திருப்பதாக கூறியுள்ளனர். என் தந்தையோ நான் மதுராந்தகம் சென்றிருப்பதாகவும் சென்னை திரும்பியவுடன் ஒப்படைப்பதாகவும் வாக்குறுதி அளிதார். அதன்படி நான் சென்னை திரும்பியதும் கைது செய்யப்பட்டேன். பிப்ரவரி 1ம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் என்னை என் தந்தை ஒப்படைத்தார்.
தொண்டர்களுக்கு தெரிவித்த தலைவர்
மாநிலத்தில் உள்ள பிற தொண்டர்களுக்கு நான் கைதானது தெரியவில்லை. முரசொலி பத்திரிகையிலும் இது குறித்து வெளிப்படையாக தெரிவிக்க முடியாத சூழல் இருந்தது. இதனையடுத்து, என்னுடன் கைதான திமுக தலைவர்கள் பெயர்களை பட்டியலிட்ட கருணாநிதி, இவர்கள் அனைவரும் அண்ணா நினைவு தினத்தன்று தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் நிலையில் இல்லை என முரசொலியில் செய்தி வெளியிட்டார். கட்சித் தொண்டர்கள் என் கைது செய்தி மறைமுகாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.
சிறை வாழ்க்கை
அதன்பின்னர் நான் அனுபவித்த சிறை வாழ்க்கை எனக்கு மிகப் பெரிய அரசியல் பாடங்களை கற்றுக் கொடுத்தது. ஆனால், அதற்காக நான் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. ஆம், சிறையில் நான் இரக்கமின்றி அடித்து துன்புறுத்தப்பட்டேன். என்னை காப்பதற்காக முயற்சித்த மேயர் சிட்டிபாபு படுகாயமடைந்தார்.
சிறைச்சாலை கொடுமைகள்
அப்போது நான் வாங்கிய அடியால் ஏற்பட்டதே எனது வலது கரத்தில் இருக்கும் இந்த தழும்பு. பின்நாளில் அதுவே பல்வேறு இடங்களிலும் எனது நிரந்தர அடையாளமாயிற்று. சிறைச்சாலையிலே அறையில் இரண்டு பானைகள் வைத்திருப்பார்கள். ஒரு பானையில் குடிநீர் வைத்திருப்பார்கள். ஒருபானையில் சிறுநீர் கழிக்க வைத்திருப்பார்கள். சில நேரம் சிறுநீர் கழிக்க வேண்டிய பானை நிரம்பி அறை முழுவதும் வழிந்து ஓடும். தகாத வார்த்தைகளால் பேசுவார்கள்.
சிட்டிபாபுவின் மரணம்
சிறையில் நடந்த கொடூர தாக்குதல் காரணமாக நான் மயங்கி விழுந்தேன். தொடர்ந்து என் மீது தாக்குதல் நடத்த வந்தனர். என்னை காப்பாற்ற முயன்ற குற்றத்திற்காக அண்ணன் சிட்டிபாபுவை படுக்க வைத்து தாக்கி பூட்ஸ் காலால் தாக்கி வயிற்றில் போலீசார் மிதித்துள்ளனர். இதனால் அவருக்கு வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டு சீழ் பிடித்தது. பின்னர் அவர் உடல் நிலை மோசமானதால் ஆபரேஷன் நடந்தது. என்றாலும் அவர் உயிர் பிழைக்கவில்லை.