சிறுமியர் ஆடும் கல்லாங்காய்.. பல்லாங்குழி.. தீவுத் திடல் சுவர்களை அலங்கரிக்கும் வண்ண வண்ண ஓவியங்கள்
சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சுவர்களில் வண்ண வண்ணமாய் ஓவியம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது காண்போரை கவர்ந்து வருகிறது.
சென்னை: ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது சுற்றுலா பொருட்காட்சி நடக்கும் இடம் சென்னையிலுள்ள தீவுத் திடல். இந்த இடத்தில் அரசு நடத்தும் பொருட்காட்சிகள் தவிர புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அகண்டு விரிந்த இடமான இந்த தீவுத்திடல், மெரினாவில் அண்ணா நினைவிடம் முடியும் இடத்தில் தொடங்கி கோட்டைக்கு முன் முடிவடையும்.
முதல்வர், அமைச்சர்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் இந்த வழியாகத்தான் போவதும் வருவதுமாக இருப்பார்கள். மரங்கள் செறிவாக வளர்ந்து அழகாக அமைந்துள்ள இந்த வழியை மேலும் அழகு செய்து வருகின்றனர் ஓவியர்கள்.
பாரம்பரிய விளையாட்டு
தீவுத்திடல் சுவரில் சிறுமியர் மற்றும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக்களை மையமாகக் கொண்டு ஓவியம் தீட்டப்பட்டு வருகிறது. பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, கல்லாங்காய் ஆகிய விளையாட்டுக்களை இந்த சுவர்களில் ஓவியர்கள் வரைந்து வருகின்றனர்.
பல்லாங்குழி
சிறுவர், சிறுமியர் விரும்பி விளையாடும் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழியை இரண்டு பேர் உட்கார்ந்து விளையாடுவது போன்று தத்ருபமாக சுவர்களில் வரையப்பட்டுள்ளது. இது பார்ப்போரை கவர்ந்து வருகிறது.
கல்லாங்காய்
சின்னஞ்சிறிய கருங்கல்லை தரையில் கொட்டி ஒவ்வொன்றாய் கைகளின் இரண்டு விரல்களால் பொறுக்கி எடுக்கும் விளையாட்டு கல்லாங்காய். இந்த விளையாட்டை 3 சிறுமியர் அமர்ந்து விளையாடுவது போல் சுவர்களில் ஓவியர்கள் வரைந்துள்ளனர். இது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
ஓவியர்களின் ஈடுபாடு...
இந்த சுவரை அழகு படுத்தும் பணியில் மூன்று ஓவியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிதானமாக ஒவ்வொரு ஓவியமாக குறிப்பட்ட அளவு இடைவெளியில் இவர்கள் வரைந்து செல்கிறார்கள். இந்தப் பணிகள் முழுவதும் விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது.