இசை விழா நடந்தே ஆக வேண்டும்... சென்னை இசைக் கலைஞர்கள் வலியுறுத்தல்!
சென்னை: சென்னை பெரு வெள்ளத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை மிகவும் எளி்மையாகக் கொண்டாடுவது என்று கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர் பேராயர்கள். அதேபோல புத்தாண்டுக் கொண்டாட்டம் இந்த முறை கிடையாது என்று தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர். ஆனால் டிசம்பர் மாதத்தில் சென்னையில் வருடா வருடம் நடைபெறும் இசை விழாவை நிறுத்தக் கூடாது என்று பல கர்நாடக இசைக் கலைஞர்கள் கோரியுள்ளனர்.
பல சபாக்களில் இசை விழாக்களும் ஏற்கனவே தொடங்கி விட்டன. சென்னை இப்போது இருக்கும் நிலையில் இசை விழா தேவையா என்று பலரும் கேட்கும் நிலையில், நி்ச்சயமாக இது நடத்தப்பட வேண்டும் என்று பல இசைக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேசமயம், பாம்பே ஜெயஸ்ரீ உள்ளிட்ட பல முக்கிய கலைஞர்கள் இந்த ஆண்டு இசை விழாவிலிருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளனராம். சென்னை மக்களுக்கு ஆதரவாக இந்த நிலையை அவர்கள் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
டிசம்பர் இசை விழா
சென்னையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் இசை விழா நடைபெறும். டிசம்பர் 1ம் தேதி முதல் இது களை கட்டும். மார்கழி விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது.
உலகெங்கிலுமிருந்து
இந்த இசை விழாக்களில் முன்னணிக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு பாடுவார்கள். சென்னை நகரில் உள்ள பல்வேறு சபாக்கள் களை கட்டியிருக்கும். உலகின் பல பகுதிகளிலிருந்தும் கர்நாடக இசை ரசிகர்கள் குவிந்து விடுவார்கள். பார்க்கவும், பாடி ரசிக்கவும்.
சென்னையை உலுக்கிய மழை
பல காலமாக நடந்து வரும் இந்த விழாவுக்கு இந்த ஆண்டு பெரு மழையாலும், வெள்ளத்தாலும் சங்கடம் வந்து சேர்ந்துள்ளது. சென்னை நகரமே இப்போதுதான் தண்ணீரிலிருந்து எழுந்து வந்துள்ளது. இன்னும் கூட வெள்ளத்தின் ஈரம் காயவில்லை. இந்த நிலையில், இசை விழா அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கலைஞர்களுக்குள் குழப்பம்
ஒரு தரப்பு கலைஞர்கள் சென்னை நகரம் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் இசை விழாவை கைவிடலாம் என்று கூறுகின்றனர். சிலரோ அடக்கமாக நடத்தலாம் என்கிறார்கள். ஆனால் ஒரு தரப்பினர் விழாவை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது என்று கூறியுள்ளனர்.
துணைக் கலைஞர்கள் பாதிக்கப்படுவார்கள்
விழாவை நிறுத்தக் கூடாது என்று இவர்கள் கூறுவதற்கான காரணம் இதுதான்.. இந்த விழாவை நம்பித்தான் பல துணைக் கலைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு இந்த விழா முக்கியமானது. வருவாய்க்கு முக்கியமானது. விழா நின்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது அவர்களது வாதமாகும்.
அருணா சாய்ராம்
இதுகுறித்து பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் கூறுகையில், நிச்சயம் விழா நடக்க வேண்டும். சென்னையில் பேரழிவு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் சென்னை மக்கள் காட்டிய நம்பிக்கையும், தைரியமும் அனைவரையும் வியக்க வைத்து விட்டது. நிச்சயம் நாம் எழுந்து நிற்க முடியும் என்பதை நம் மக்கள் காட்டி விட்டனர். இயல்பு நிலைக்குத் திரும்ப மாற்றம் தேவை. அந்த மாற்றத்தைத் தர வல்லது இசை. எனவே இசை விழா தொடர வேண்டும் என்று கூறுகிறார் அருணா சாய்ராம்.
நிதி திரட்டலாம்
மேலும் அவர் கூறுகையில் இந்த இசை நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தி நிதி திரட்டலாம். அந்த நிதியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க பயன்படுத்தலாம் என்றும் அருணா கூறுகிறார்.
இதேபோல மேலும் பல முன்னணிக் கலைஞர்களும் இசை விழா தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பல சபாக்களில் விழா ஏற்கனவே தொடங்கியும் விட்டது.