3000 அடி உயர தலைமலை கிரிவலத்தில் தவறி விழுந்த ஆறுமுகம் உடல் மீட்பு- மலையடிவாரம் கொண்டுவரப்பட்டது!
தலைமலை பகுதியில் இருந்து விழுந்த ஆறுமுகத்தின் உடலை மீட்டு அவரது உறவினர்களே மலையடிவாரத்துக்கு கொண்டுவந்தனர்.
திருச்சி: முசிறி அருகே தலைமலையில் கிரிவலம் சென்றபோது 3000 அடி உயரத்திலிருந்து விழுந்த இளைஞரின் உடலை அவரது உறவினர்களே மீட்டு மலையடிவாரத்துக்கு கொண்டு வந்தனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அகண்ட காவிரியின் வடகரையில் நீர்வளம், நிலவளம் பொருந்திய தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயில் மிக பழமையும், தொன்மையும் வாய்ந்த சிறப்பு பெற்ற வைணவ கோயிலாகும். நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே கிரிவலம் வந்தனர்.
அப்போது கிரிவலம் வந்த இளைஞர் ஒருவர் 3000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். இதுகுறித்து தகவலறிந்த எருமைப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தவறி விழுந்த இளைஞரை மீட்பதற்கு வனத்துறை, தீயணைப்புத் துறை ஆகியோரின் உதவியை போலீஸார் நாடினர். போலீஸ் விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் ஆறுமுகம் என்றும் திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாததால் குழந்தை வரம் வேண்டி கிரிவலம் வந்ததும் தெரியவந்தது.
அந்த இளைஞரின் உடலை தீயணைப்புத் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த இளைஞரின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலை மேலே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் மலைப்பாதை மிகவும் குறுகியதாக உள்ளதால் உடலை மேலே கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஆறுமுகத்தின் உடலை 600 அடி உயர பள்ளத்தில் உடற்கூறு செய்துவிட்டு அடக்கம் செய்ய போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இதை ஏற்காத உறவினர்கள் தாங்களே முயன்று ஆறுமுகத்தின் உடலை மீட்டு ஒத்தரசு மலையடிவாரம் கொண்டுவந்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின் ஆறுமுகம் உடல் முசிறிக்கு கொண்டு செல்லப்படுகிறது.