ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி கமிஷன் இன்று ஆய்வு!
அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி கமிஷன் இன்று ஆய்வு மேற்கொள்கிறது.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி கமிஷன் இன்று ஆய்வு மேற்கொள்கிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிப்பட்டதை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த கமிஷன் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைகள், எம்பாமிங் செய்யப்பட்ட அறை, மருத்துவ குழு தங்கி இருந்த அறை, அதிகாரிகள், அமைச்சர்கள், சசிகலா தங்கி இருந்த அறை என 10 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
வழக்கறிஞர்கள் நிரஞ்சன், பார்த்தசாரதி ஆகியோர் ஆய்வு மேற்கொள்கின்றனர். சசிகலா தரப்பில் இரு வழக்கறிஞர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வு காரணமாக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 2008ஆம் எண் அறையில் உள்ள நோயாளிகளை வேறு அறைக்கு மாற்றினால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அப்போலோ கருதினால் இழப்பீடு தர ஆணையம் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆறுமுகசாமி கமிஷனுடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லவுள்ளார்.