ஜெயலலிதா மரண விவகாரம்: இளவரசி மகன் விவேக்கிற்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இளவரசி மகன் விவேக்கிற்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக இளவரசி மகன் விவேக்கிற்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
இளவரசியின் மகன் விவேக் ஜெயாடிவி சிஇஓவாக உள்ளார்
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்த கையோடு ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
பலரிடம் விசாரணை
இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் என பலரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
விவேக் ஆஜராக சம்மன்
இந்நிலையில் இளவரசியின் மகனான விவேக் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 13ஆம் தேதி விவேக் ஆஜராக வேண்டும் என விசாரணை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
4 பேரிடம் விசாரணை
ஆறுமுகசாமி கமிஷன் வரும் 12 ஆம் தேதி முதல் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அடுத்தவாரம் 4 பேரிடம் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்துகிறது.
ஜெ.டிரைவரிடம் விசாரணை
விவேக் ஜெயராமன் ஜெயலலிதாவுடன் நீண்ட நாட்கள் இருந்தவர் என்பதால் அவரிடம் விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 12ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பனிடம் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்துகிறது.
சசிகலா உதவியாளர்
அப்பல்லோ மருத்துவர் பாலாஜியிடம் பிப்ரவரி 14ஆம் தேதி விசாரணை நடத்துகிறது ஆறுமுகசாமி கமிஷன். பிப்ரவரி 15ஆம் தேதி சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.