சூடுபிடிக்கும் ஜெ. மரண விசாரணை.. அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் நேரில் ஆஜராக ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம், அவர் சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர்கள், செவிலியர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவ்வாண்டு டிசம்பர் 5ம் தேதிவரை அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற நிலையில், டிசம்பர் 5ம் தேதி இரவு மரணமடைந்தார் என்று மருத்துவமனை அறிவித்தது.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி இப்போதைய துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் என்ற பெயரில் தர்ணா நடத்தினார். இதையடுத்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.
இந்த விசாரணை ஆணையம் பல தரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் அர்ச்சனா, நர்சாக பணிபுரியும், ரேணுகா ஆகியோரை வரும் 5ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியுள்ளது ஆறுமுகசாமி ஆணையம்.
அதேபோல, வரும் 6ம் தேதி டாக்டர் பிரசன்னா மற்றும் நர்ஸ் ஷீலா ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.