இது என்ன அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த சோதனை.. எம்ஜிஆர் காலத்திலிருந்து தோண்டி எடுக்கிறது ஆணையம்
சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜியாருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த ஆவணங்களை, அப்பல்லோ மருத்துவமனையிடம் ஆறுமுகசாமி ஆணையம் கேட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதால், முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், தமிழக அரசு, ஆணையம் அமைத்துள்ளது.
இந்த ஆணையம் பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.
34 வருடங்கள்
இந்த நிலையில், எம்ஜிஆர் சிகிச்சை குறித்த ஆவணங்களை தங்களிடம் சமர்ப்பிக்குமாறு, ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவமனைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த நான்காம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதிலும், இன்றுதான் அதுகுறித்து தெரியவந்தது. 23ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எம்ஜிஆர் அப்பல்லோவில் 1984ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதன்பிறகு, மேல் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார்.
உத்தரவு யாருடையது
அமெரிக்கா அழைத்துச் செல்லும் முடிவை எடுத்தது யார்? ஜெயலலிதாவிற்கு ஏன் அதுபோல வெளிநாடு சிகிச்சையளிக்க முடிவெடுக்கவில்லை என்ற கேள்விக்கு விடை தேட எம்ஜிஆர் சிகிச்சை நடைமுறையை ஆறுமுகசாமி ஆணையம் கேட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும் 34 வருடங்கள் கழித்து, சிகிச்சை ஆவணங்களை கேட்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சைக்கு சேர்ப்பு
அக்டோபர் 5 இரவு, எம்ஜிஆரை அவர் மனைவி ஜானகி அப்பல்லோ மருத்துவமனை அழைத்து சென்றார். மூச்சு திணறல் என்றுதான் எம்ஜிஆர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு கிட்னி பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. அப்போது, டாக்டர் ஹண்டே சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர்தான் சிகிச்சைக்கான உத்தரவுகளை ஒருங்கிணைத்தார்.
இந்திரா காந்தி அக்கறை
அப்போது பிரதமராக பதவி வகித்த இந்திரா காந்தி, எம்ஜிஆர் சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்தினார். அவரே நேரடியாக அப்பல்லோ வந்து எம்ஜிஆர் சிகிச்சையை நேரில் விசாரித்து, சிறப்பு ஆம்புலன்ஸ் மூலமாக அமெரிக்கா கொண்டு செல்ல உத்தரவிட்டார். மத்திய அரசு விஷேச அக்கறை எடுத்து எம்ஜிஆரை அமெரிக்கா அனுப்பியது. எனவே, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் எம்ஜிஆர் சிகிச்சை நடைமுறை செயல்பாடுகளை வழங்குவதால் விசாரணைக்கு எந்த அளவுக்கு அது உதவும் என்று தெரியவில்லை.