ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஆஜராக ஜெ.தீபாவுக்கு சம்மன்
ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஆஜராக ஜெ.தீபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜெ.தீபாவுக்கு வரும் 13-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்காக எழிலகத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி தனது விசாரணை கடந்த மாதம் துவக்கினார். திருக்கழுக்குன்றம் தேர்தலுக்கான ஜெயலலிதாவின் கைரேகை வழக்கு தொடர்பாக திமுக மருத்துவர் அணியைச் சேர்ந்த சரவணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதன்பின்னர் அரசு மருத்துவர்கள் ஆஜராகினர். ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பிரமாணப் பத்திரங்கள் அளிக்கலாம் என்று நீதிபதி ஆறுமுகசாமி கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தன்னையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அவர் வரும் 13-ஆம் தேதி ஆஜராகுமாறு ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார்.
வரும்போது தீபா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களுக்கான மூல ஆவணங்களை கொண்டு வர ஆணையிட்டுள்ளார்.