ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த பாதுகாவலர் பெருமாள்சாமிக்கு விசாரணை கமிஷன் சம்மன்
ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமிக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் பாதுகாவலகராக இருந்த பெருமாள்சாமி வரும் 10-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் அவர் தனது விசாரணை தொடங்கினார். இதற்காக அவருக்கு எழிலகத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு, அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கணவர் மாதவன், தலைமை செயலாளர்களாக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், ராம்மோகன்ராவ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் சசிகலாவின் உறவினர்களான தினகரன், கிருஷ்ணப்பிரியா, ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. மேலும் தங்களிடம் உள்ள ஆதாரங்களை 7 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் தினகரன் தரப்பு சார்பில் விசாரணை ஆணையத்திடம் பென்டிரைவ் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலர் பெருமாள்சாமி வரும் 10-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று ஆறுமுகசாமி சம்மன் அளித்துள்ளார்.
அதேபோல் 8-ஆம் தேதி டாக்டர் சிவக்குமாரும், 9-ஆம் தேதி ஜெயலலிதாவின் பூங்குன்றனும், 11-ஆம் தேதி டாக்டர் பாலாஜி 2-ஆவது முறையாகவும் ஆஜராக உள்ளனர்.