ஜெ. சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் நேரில் ஆய்வு.. ஆறுமுகசாமி ஆணையம் அதிரடி
Recommended Video
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில், அவரது மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷன் வரும் 29ம் தேதி நேரில் ஆய்வு நடத்த உள்ளது.
ஜெயலலிதா 2016ம் ஆண்டு, டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். 75 நாட்கள் மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சைபெற்றதாக கூறப்பட்டது. அந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவின் எந்த புகைப்படமோ, வீடியோவோ வெளியாகவில்லை. ஆளுநர் உட்பட அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்ற யாருமே தாங்கள் ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாகவும் கூறவில்லை.
ஜெயலலிதாவை அவரது தோழியாக கருதப்படும் சசிகலாதான் அத்தனை நாட்களாக கூடவே இருந்து கவனித்து வந்தார். எனவே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தினார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அரசு, ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிய, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது.
பல தரப்பட்டவர்களையும் விசாரணை நடத்திய ஆணையம், வரும் 29ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் நேரில் ஆய்வு நடத்த உள்ளது. நாளை மறுநாள்,
15ம் தேதி ஆய்வு நடத்த திட்டமிட்ட நிலையில் அப்பல்லோ நிர்வாகம், ஏனோ அனுமதிக்கவில்லை.
எனவே 29ம் தேதி ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா தங்கியிருந்த அறை, ஐசியூ, சசிகலா தங்கியிருந்த அறைகள், அமைச்சர்கள் இருந்த அறைகள் என அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய உள்ளது ஆறுமுகசாமி கமிஷன்.
ஆறுமுகசாமி கமிஷன் 29ம் தேதி இரவு 7 மணி முதல், 45 நிமிடங்கள், ஆய்வு நடத்த உள்ளது.
ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு நடத்த உள்ள இடங்கள்:
1) எமர்ஜென்சி வார்டு
2) ஐசிசியூ (ICCU) வார்டு
3) எம்டிசிசியூ
4) மருத்துவமனையின் 2வது தளம்
5) அரசு மருத்துவ அதிகாரிகள் தங்கியிருந்த அறைகள்
6) அமைச்சர்கள் தங்கியிருந்த அறைகள்
7) சசிகலா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தங்கியிருந்த அறைகள்
8) ஜெயலலிதா சிகிச்சை பெற்ற இடத்திற்கும், ஸ்கேன் மையத்திற்கும் நடுவே போடப்பட்ட பாதை
9) ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது உடலுக்கு எம்பாமிங் செய்ய வைக்கப்பட்ட இடம்
10) ஜெயலலிதாவுக்கு உணவு வழங்கிய சமையலறை.