ஜெ. ஆவணங்கள் விவகாரம்.. அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை?
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: ஜனவரி 12ம் தேதிக்குள் ஜெயலலிதா சிகிச்சை ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
புகார் அளித்தோர், புகாருக்கு உள்ளானோர் என அனைத்து தரப்பினரையும் விசாரித்து வரும் இந்த ஆணையத்தில் தினமும் பல புதிய தகவல்கள் பதியப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆணையத்திடம் தாக்கல் செய்யக்கோரி நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அப்பல்லோ மருத்துவமனை இதனை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுத ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதில், ஜெயலலிதாவின் சிகிச்சை ஆவணங்களை வரும் 12ம் தேதிக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.