அருணாச்சல் குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு- மோடி அரசுக்கு பலத்த அடி... சோனியா, கெஜ்ரிவால் வரவேற்பு
டெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் மீது அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் பா.ஜ.க மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் உதவியுடன் நபம் துகியை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து அருணாசலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அருணாசலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான நபம் துகியின் ஆட்சி அமைகிறது.
இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த தீர்ப்பானது ஜனநாயத்தை நிலைநாட்டும் வகையில் உள்ளது. மத்திய அரசு இனி தனது பலத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. ஜனநாயக நெறிகளை சட்ட திட்டத்தின் படி மதிக்காமல் நடந்து கொண்டவர்கள் இன்று தோல்வியை சந்தித்துள்ளனர். அருணாச்சல பிரதேச மக்களுக்கு வாழ்த்துக்கள். ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், கூட்டாட்சி அமைப்பை தொடந்து பாதுகாக்கவும் தொடர்ந்து நாம் போராடுவோம்.
இது குறித்து அருணாச்சல பிரதேச முதல்வர் நபம் துகி தெரிவித்துள்ளதாவது: எனது தலைமையிலான அரசை சீர்குலைக்கும் முயற்சியில் பல்வேறு யற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக பாஜக அரசு முயற்சி மேற்கொண்டது. மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக எனது அரசு செயல்படுவது ஆளுநருக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்:
மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மேலும் ஒரு பலத்த அடியைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் மோடி பாடம் கற்றுக் கொண்டு, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் தலையிடுவதை நிறுத்திக் கொள்வார் என நினைக்கிறேன்.
உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஹரிஷ் ராவத்:
உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் ஆளுநர் தங்களது அதிகாரங்களை தவறாக உபயோகித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை அளித்துள்ளது.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல்
உயர் நீதிமன்றத்திற்கு நாங்கள் சல்யூட் அடிக்கிறோம். இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இதன் மூலம் எந்தவொரு அரசியல் கட்சிகளும் சட்டத்தை மீறமுடியாது என்பது தெளிவாகிறது.
இந்த தீர்ப்பானது ஆளுநர் தனது அதிகார பலத்தை தவறாக உபயோகிக்கக் கூடாது என்பதை காட்டுகிறது.