தொடரும் வருமான வரிச் சோதனை... அருப்புக்கோட்டையில் 4ம் நாளாக அதிகாரிகள் ஆய்வு
சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகத்தில் 4ஆம் நாளாக வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.
விருதுநகர்: சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகத்தில் 4ஆம் நாளாக வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்திற்கு இது வருமான வரிச்சோதனை காலம் என்று கூட கூறலாம். கிறிஸ்டி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையை தொடர்ந்து, தற்போது எஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. ஆபரேஷன் பார்க்கிங் மனி என்ற பெயரில் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த நான்கு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
இதுவரை 105 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. மொத்தமாக இதுவரை 180 கோடி ரூபாய் வரை பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. அருப்புக்கோட்டை செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நான்காவது நாளாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
இவரின் குடும்ப நிறுவனமான எஸ்பிகே என்ற கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனம் தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பந்த முறையில் செய்த சில பணிகளில், முறைகேடுகள் செய்துள்ளதாக வந்த புகாரை அடுத்த இந்த சோதனை நடக்கிறது.
இன்று செய்யாதுரைக்கு சொந்தமான மர்ம பங்களாவில் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இதில் இன்னும் சில முக்கியமான ஆவணங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது 30க்கும் மேற்பட்ட இடங்களில் மீண்டும் சோதனை நடக்கிறது.