மணக்க மணக்க சமைத்து போட்ட.. "அறுசுவை அரசு" நடராஜன் காலமானார்!
அறுசுவை அரசர் நடராஜன் நேற்று உயிரிழந்தார்.
சென்னை: பிரபல சமையல் கலைஞர் அறுசுவை அரசர் நடராஜன் உடல் நலக் குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.
"சைவ சமையலா? கூப்பிடுங்கள் நடராஜனை" இப்படித்தான் ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்தார் நடராஜன். லட்சக்கணக்கான மக்களால் விரும்பப்பட்டவர். இவரது சாப்பாட்டை சாப்பிடாதவர்களே பெரும்பாலும் இருக்க முடியாது. சினிமா, அரசியல், விளையாட்டு பிரபலங்களுக்கு கல்யாண மண்டபம் கிடைக்குதோ இல்லையோ, அறுசுவை நடராஜனை முதலில் புக் செய்து விடுவார்கள்.
அறுசுவை மசாலா
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர்தான் நடராஜன். சுமார் 55 ஆண்டுகளாக சமையல் உலகில் முடிசூடா மன்னனாக விளங்கினார். 55 வருடங்களாக அறுசுவை விருந்துகள் படைத்த நடராஜன், ஒருகாலத்தில் ஒருவேளை உணவுதான் சாப்பிட்டவர். அதுவும் கால்வயிறோ, அரை வயிறோதான். ஆனால் சமையல் கலையில் தனக்கென தனியிடத்தை பிடித்த அறுசுவை நடராஜனால் அறுசுவை மசாலா என்ற நிறுவனத்தை நடத்தப்பட்டு வருகிறது.
மூக்கு முட்ட சாப்பாடு
எந்த கல்யாண வீடு என்றாலும் பந்தியில் சாப்பிட்டு முடித்தபிறகு மக்கள் தேடி செல்வதும், ஓடிச்செல்வதும் நடராஜனைதான். "சாப்பாடு அருமை சார்... நீங்க சமைச்சா சாப்பிடற அளவுகூட தெரியமாட்டேங்குது... கொஞ்சமா சாப்பிடலாம்னுதான் உட்கார்ந்தேன்... ஆனா இப்படி மூக்கு முட்ட சாப்பிட வெச்சிட்டீங்களே".. என்றுதான் புகழ்ந்து செல்வார்கள்.
அறுசுவை அரசு பட்டம்
ஜி.கே.மூப்பனார், ரஜினிகாந்த், அம்பானி. சு.சாமி போன்ற பிரபலங்களின் வீடுகளின் ஆஸ்தான சமையல் நடராஜன்தான். இவரது கைப்பக்குவம், சுவை நிறைந்த சாப்பாட்டை ருசித்து ரசித்து சாப்பிட்ட விவி கிரிதான், அறுசுவை அரசு என்ற பட்டத்தை சூட்டினார். அத்தோடு அவரது அலுவலகத்தின் தலைமை சமையல் கலை வல்லுநராகவும் அமர்த்தி கொண்டார்.
ஆழ்ந்த இரங்கல்கள்
கூப்பிடும் இடங்களுக்கு சென்று சமைத்து கொடுத்துவிட்டு வராமல், பல சமையல் பற்றிய புத்தகங்களை எழுதியுள்ளார் நடராஜன். கடந்த ஒரு வாரமாக இவர் சளித்தொல்லையால் மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். நேற்று அவர் மரணம் அடைந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் வருத்தங்களையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
நாக்கில் ஒட்டிய ருசி
வயிறும் நிறைய செய்து மனசையும் நிறைய செய்தவர் நடராஜன். அவர் மறைந்தாலும், இந்த அறுசுவை மன்னன் நடராஜனின் கைப்பக்குவத்தில் உருவான மணக்க மணக்க சாம்பார் ஆகட்டும், மூக்கை துளைத்து சென்ற ரசம் ஆகட்டும்... அவற்றின் ருசி இன்னமும் பலருக்கு நாக்கில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும்.