ஆட்சி சரியில்லை அதனால் தான் ஆளுநர் ஆய்வு... தமிழிசை பொளேர்
ஆட்சி சரியில்லாததால் தான் தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்கிறார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதுக்கோட்டை: பாஜக ஆளும் மாநிலங்களில் எந்த ஆளுநரும் ஆய்வு மேற்கொள்வதில்லை என்று குறிப்பிட்ட தமிழிசை, ஆட்சி சரியில்லாததால் தான் தமிழகத்தில் ஆளுநர் ஆய்வுகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் மீது எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்தார். பாஜக ஆளும் மாநிலங்களில் எந்த ஆளுநரும் ஆய்வுக்கு செல்வதில்லை என்று கூறிய அவர், அங்கெல்லாம் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆட்சி சரியாக இல்லாததையே ஆளுநரின் தொடர் ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக கூறிய அவர், அதனால் இங்கு ஆளுநர் ஆட்சி நடைபெறுவதாக சிலர் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக தெரிவித்தார். மாநிலத்தின் முன்னேற்றத்தில் தான் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டுமே தவிர இவ்வாறான தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்க கூடாது எனவும் எதிர்க்கட்சியினருக்கு அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய கடன்களையும், நிதிகளையும் ஆளும் கட்சி முறையாக பயன்படுத்தவில்லை என்று கூறிய அவர், இவற்றையெல்லாம் அறிந்துக்கொள்ளவே ஆளுநர் தொடர் ஆய்வுகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.