சாம்பாரை மறந்துட வேண்டியதுதான்... வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை விர்!
நெல்லை: பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றிய பகுதிகளில் சின்ன வெங்காயம், பல்லாரி (பெரிய வெங்காயம்) பயிரிடப்பட்டுள்ளது. இவற்றை அறுவடை செய்ய குறைந்தபட்சம் ஒரு மாத காலம் ஆகும். தற்போது பல்லாரி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை நோய் தாக்குவதால் சரியான விளைச்சல் இல்லாமல் உள்ளது. இதனால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது.
மேலும் கீழப்பாவூர், மேலப்பாவூர், சுந்தரபாண்டியபுரம், சேர்ந்தமரம், குலையநேரி, கீழகலங்கல், மேலக்கலங்கல் உள்பட பல பகுதிகளில் இருந்து வெங்காயம் ஓரளவுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வெங்காயம் போதிய வரத்து இல்லாததாலும், குறைந்த அளவே வெளியே இருந்து வருவதாலும் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்டது.
இது போல் உள்ளூரில் இருந்து பல்லாரி வரத்து இல்லாததால் புனேவில் இருந்து அதை இறக்குமதி செய்கின்றனர். அதனால் அதன் வரத்து அதிகரித்துள்ளது. இது கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது. உள்ளூர் பல்லாரி இன்னும் விற்பனைக்கு போதிய அளவு வரவில்லை என்று கூறப்படுகிறது. அதன் வரவு இருந்தால் விலை இன்னும் குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருப்பதால் பொதுமக்கள் குழம்பு வைக்க வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.