ஜெயலலிதா உடல் நிலை பற்றி வெளியான தகவல்கள்... கடிதம் எழுதி வைத்து அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை...
திருச்சி : முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி ஊடகங்களில் வெளியான தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார்.
கீழகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் 58 வயதான வீரராகவன். அ.தி.மு.க. பிரமுகரான இவர், தீவிர முதலமைச்சர் ஜெயலலிதாவின் விசுவாசியாவார்.
இந்த நிலையில் நேற்று வீரராகவன் வீட்டில் உள்ள அறை மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொன்மலை போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது வீரராகவன் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் உடல் மண்ணுக்கு, உயிர் புரட்சித் தலைவி அம்மாவுக்கு என்று வீரராகவன் எழுதியிருந்தார். கடந்த சில நாட்களாக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வந்த வதந்தியால் வீரராகவன் சோகமுடன் காணப்பட்டாராம்.
இது குறித்து குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் சோகத்துடன் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு அவர் இந்த சோக முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்த வீரராகவன் 1973 - இருந்தே அ.தி.மு.க உறுப்பினர் ஆவார். மேலும் 30-வது வட்ட முன்னாள் செயலாளர் ஆவார். இவரது மனைவி உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டவர்.
வீரராகவன் தற்கொலை குறித்து அறிந்ததும் அ.தி.மு.க. வைச் சேர்ந்த பிரமுகர்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.