மதுரையில் 4 நாட்களுக்கு ஒரு நாள் தண்ணீர் விநியோகம்... திண்டாட்டத்தில் மக்கள்!
மதுரையில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னரே தண்ணீர்பஞ்சம் தொடங்கிவிட்டதால் மக்கள் கவலையில் உள்ளனர்.
மதுரை: மதுரையில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னரே தண்ணீர் பஞ்சம் தொடங்கிவிட்டது. வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் 4 நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தண்ணீரை விலைகொடுத்து வாங்கி வருகின்றனர்.
மதுரையில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தண்ணீர் பஞ்சம் தொடங்கிவிட்டது. வைகை அணையை மட்டுமே நம்பி மதுரை மாவட்ட மக்கள் உள்ளனர். வைகை அணையின் நீர்மட்டம் 32 அடி மட்டுமே உள்ளதால் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4 நாட்களுக்கு ஒரு முறை என்று தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டால் மட்டுமே கோடை காலத்தை சமாளிக்க முடியும் என்று இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோடை தொடங்குவதற்கு முன்னரே மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் திண்டாடத் தொடங்கியுள்ளனர்.
தண்ணீர் விநியோகம் இல்லை
ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வந்தாலே சமாளிப்பது சிரமம் என்ற நிலையில் 4 நாட்களுக்கு ஒரு நாள் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டால் என்ன செய்வது என்று கவலையில் உள்ளனர் மக்கள். மதுரை அண்ணாநகர், வைகை காலணி, கேகே நகர் பகுதிகளிலும் தண்ணீர் விநியோகம் முறையாக இல்லை என்று பெண்கள் தெரிவித்துள்ளனர்.
எத்தனை நாட்களுக்கு சேமிப்பது
4 நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் வருகிறது. அப்படி வரும்போது எங்களால் சேமித்து வைக்க முடியவில்லை, எந்த நேரத்தில் தண்ணீர் வருகிறது என்று கூட தெரியவில்லை. 1 மணி நேரம் வந்தாலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்தாலாவது சமாளிக்க முடியும் என்றும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.
குடிநீருக்கு மிகவும் கஷ்டம்
மாநகராட்சியில் வரும் தண்ணீரை குடிக்க பயன்படுத்த முடியாது என்பதால் ஒரு குடம் நீர் ரூ. 12 என்ற விலையிலும் 25 லிட்டர் கேன் ஒன்று ரூ. 20 முதல் ரூ. 35 வரை என்ற விலையிலும் வாங்கியே பயன்படுத்துவதாகவும் இல்லத்தரசிகள் தெரிவித்துள்ளனர்.
விருந்தினர்கள் வேண்டாம்
இரண்டு பேர் உள்ள குடும்பத்திற்கே ஒரு குடம் தண்ணீர் போதுமானதாக இருக்கிறது. 4 பேர் உள்ள குடும்பம் என்றால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை, வாடகை கொடுப்பதா தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதா என்று தெரியவில்லை. இதனாலேயே சித்திரை திருவிழாவிற்குக் கூட விருந்தினர்களை வரவேண்டாம் என்றே சொல்லிவிட்டதாகக் கூறுகின்றனர் மதுரை மக்கள். வானிலை தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள https://tamil.oneindia.com/weather/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.