வெயில் வருது வெயில் வருது.. தீயாய் வேலை செய்யத் தயாராகும் தீயணைப்புப் படை!
சென்னை: வெயில் காலம் தொடங்கி விட்டது. தற்போது மார்ச் மாதம் தொடங்கியுள்ள நிலையில் விரைவில் கடும் வெயிலை தமிழகம் சந்திக்கவுள்ள நிலையில் இப்போதே தீயணைப்புத் துறை தன்னை ஆயத்தமாக்கிக் கொள்ள ஆரம்பித்து விட்டதாம்.
தற்போதே பல பகுதிகளில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. குறிப்பாக சேலத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் வெளுத்தெடுக்கிறதாம். சென்னையிலும் வெயில் வெளுத்தாலும் கூட இன்னும் இரவு நேரப் பனி குறையவில்லை. பகலிலும் கூட வெயில் மெதுவாக்ததான் ஏறுகிறது. இரவில் புழுக்கம் ஆரம்பித்து விட்டது.
வெயில் உச்சமாக இருக்கும் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்தை சமாளிக்கும் வகையில் மக்கள் தயாராகி வருவது போல தீயணைப்புப் படையினரும் ஆயத்தமாகி வருகின்றனராம்.
வெயில் காலத்து வேதனைகள்
தீயணைப்புப் படையினருக்கு வெயில் காலத்தில்தான் அதிக வேலை இருக்கும். இந்த சமயத்தில்தான் அதிக அளவிலான தீவிபத்துகள் நடைபெறும் என்பதால் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டிய நிலைமை.
குடிசைப் பகுதிகளில்
பெரும் பாலும் குடிசைப் பகுதிகளில்தான் தீவிபத்துகள் அதிகம் நடைபெறும். கடும் வெயில் சமயத்தில் குடிசைகள் தீப்பற்றிக் கொள்வது இயல்பானது. எனவே குடிசைப் பகுதிகளில் தீவிபத்துகள் நடந்தால் விரைந்து செல்லும் வகையில் தீயணைப்புப் படையினர் இப்போதே பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனராம்.
மின்சாரக் கசிவு
அடுத்து மின்சாரக் கசிவால் ஏற்படும் தீவிபத்துகள். இதுதொடர்பான போன் அழைப்புகளும் சமீப காலமாக அதிக அளவில் தீயணைப்புப் படையினருக்கு வருகிறதாம்.
கேஸ் சிலிண்டர் வெடிப்பு
இதுதவிர கேஸ் சிலிண்டர் வெடிப்புகளும் தற்போது அதிகரித்து வருகின்றன. எனவே இதையும் சமாளிக்க வேண்டிய நிலையில் தீயணைப்புப் படையினர் உள்ளனர்.
ஏப்ரல் முதல் ஜூலை வரை
ஏப்ரல் முதல் ஜூலை வரை தீயணைப்புப் படையினருக்கு விடுமுறை கிடைப்பது என்பது ரொம்பக் கஷ்டமாம். எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டியுள்ள பணி என்பதால் லீவு கிடைப்பது குதிரைக் கொம்பு என்கிறார்கள்.
மக்களுக்கு யோசனை
வெயில் காலத்தில் குடிசைப் பகுதிகளில் தீவிபத்து நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்கத் தேவையான ஆலோசனைகளையும் குடிசைப் பகுதிகளில் வசிப்போருக்கு தீயணைப்புப் படையினர் கொடுத்து வருகின்றனர்.
தினசரி ரோந்து
குடிசைப் பகுதிகளில் தினசரி மாலை 3 மணிக்கு ரோந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். இந்த சமயத்தில்தான் பெரும்பாலும் தீவிபத்துகள் நடப்பதாக தீயணைப்புத் துறையினர் கூறுகின்றனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
குடிசைப் பகுதிகளில் மட்டுமல்லாமல் பிற பகுதிகளிலும் தீவிபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் தீயணைப்புப் படையினர் திட்டமிட்டுள்ளனராம.
வண்டி ரெடி
தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாம். அனைத்து வாகனங்களையும் பழுது இல்லாமல் வைத்திருக்கிறார்களாம்.