வெதர்மேன் சொன்னது போன்றே சென்னையில் குளு குளு காற்றுடன் மழை.. சென்னைவாசிகள் குஷி
வெதர்மேன் தனது பேஸ்புக்கில் சொன்னது போன்றே சென்னையில் இன்று குளு குளு காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் மழை பெய்யும் என்று வெதர்மேன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அவர் சொன்னபடி மாலையில் சென்னையில் நல்ல மழை பெய்தது.
சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக தமிழகத்தின் வெதர் மேன் தன் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவரது பதிவில் ''இன்று 1000% வட தமிழகத்தில் மழை பெய்யும் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், நேற்று போல் இன்றும் மழை பெய்ய சாத்தியக் கூறுகள் உள்ளன. இன்று சென்னையில் 50 கி.மீ. தொலைவில் கடல் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இன்று இரவு சென்னை மக்கள் குளுகுளு காற்றை உணர்வார்கள். காஞ்சிபுரம் மற்றும் வந்தவாசி இடையே புயல் காற்று வீசக்கூடும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் சொன்னது போன்றே, இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மழை பெய்துள்ளது. சென்னையின் மையப் பகுதியான அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் நல்ல குளிர் காற்றுடன் லேசான சாரல் மழை பெய்தது.
அதே போன்று, கடலூர், மதுராந்தகம், மொரப்பாக்கம், பெரும்பாக்கம், மேல்மருவத்தூரில் அரைமணி நேரம் மழை அடித்து வாங்கியது. மேலும் அச்சிறுப்பாக்கம், சித்தாமூரிர் ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டியுள்ளது.
அதே போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.