சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் அசோக்குமார்: ஆலோசகரானார் ராமானுஜம்
சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவராக அசோக்குமார் இன்று பொறுப்பேற்றார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அசோக்குமார் தமிழக மக்களின் நலனுக்காக காவல்துறை செயல்படும் என தெரிவித்தார்.
1982 ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்வான அசோக்குமார், மதுரை திருமங்கலத்தில் கூடுதல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் திருச்சியில் காவல்துறை கண்காணிப்பாளராகவும், தென் சென்னையில் காவல் துணை ஆணையராகவும் பணியாற்றினார்.
பின்னர் அயல்பணியாக சிபிஐக்கு சென்ற அசோக்குமார், பின்னர், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குநராகவும் பொறுப்பு வகித்தார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் அயல் பணியாக சிபிஐக்கு சென்ற அசோக்குமார், தென் மண்டல இணை இயக்குனராக பணியாற்றினார்.
பின்னர், ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்று தமிழகத்தில் பொருளாதார குற்றங்கள் தடுப்புப் பிரிவில் பணியாற்றினார். தொடர்ந்து உளவுத்துறைக்கு மாற்றப்பட்ட அவர், மாநில உளவுத்துறை ஏ.டி.ஜி.பி யாக நியமிக்கப்பட்டு, தொடர்ந்து அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்வும் பெற்றார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அசோக்குமார் நியமிக்கப்பட்டு, இன்று அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
36 ஆண்டுகால பணி
தமிழக டிஜிபியாக இருந்த ராமானுஜத்தின் பதவிக்காலம் நேற்றுடன் முடி வடைந்தது. இதற்கான பிரிவு உபசார விழா பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்கிழமை மாலை நடந்தது. போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ராமானுஜம் ஏற்றுக் கொண்டார்.
பெருமைப்படுகிறேன்
பின்னர் அவர் பேசும்போது, "நான் போலீஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன். 1946-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி சென்னை போலீஸில் உதவி ஆய்வாளராக எனது தந்தை சேர்ந்தார். 68 ஆண்டுகளுக்கு பிறகு அதே நாளில் நான் இன்று ஓய்வு பெறுகிறேன். தமிழக காவல் துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன். காவல் துறையை நவீனமயமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முயன்று வருகிறது.
தமிழக போலீஸ்
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 514 திட்டங்களையும், 20,500 உட் கட்டமைப்பு வசதிகளையும் போலீஸ் துறைக்கு தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அரசின் நடவடிக்கையால் தமிழக போலீஸார் பிற மாநில போலீஸாருக்கு முன்னுதாரணமாக உள்ளனர்.
ஸ்காட்லாந்து போலீசுக்கு பாடம்
அரசு நமக்கு கொடுக்கும் சலுகைகளைப் பார்த்து மற்ற மாநில போலீஸார் பொறாமைப்படுகின்றனர். ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையாக தமிழக போலீஸாரின் புலனாய்வுப் பணிகள் உள்ளன. இதேபோல நமது பணிகள் தொடர்ந்தால் விரைவில் நாம் ஸ்காட்லாந்து போலீஸாருக்கே பாடம் சொல்லிக் கொடுக்கலாம் என்று கூறினார்.
ஆலோசகராக நியமனம்
டிஜிபி ராமானுஜம் ஓய்வு பெற்றாலும் உடனடியாக காவல்துறை தலைமை அலுவலகத்தில் அரசின் ஆலோசகராக பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவுக்குத் தேவையான ஆலோசனைகளை அவர் வழங்குவார்