அன்புசெழியன் எங்கே? நண்பர், நிறுவனமேலாளரிடம் போலீஸ் கிடுக்கிப் பிடி
கந்து வட்டி புகாரில் சிக்கியுள்ள அன்புசெழியன் தலைமறைவானதை அடுத்து அவரது நண்பர், நிறுவன மேலாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: கந்துவட்டி புகாரில் அன்புச்செழியன், தலைமறைவாகியுள்ள நிலையில் அவரது நண்பர் முத்துக்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அன்புச்செழியனின் மேலாளர் சாதிக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் முத்துக்குமாரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடந்த வாரம் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு முக்கிய காரணமாக பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய கடன்தான் காரணம் என்று அவர் தற்கொலை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.
அன்புசெழியன் தலைமறைவு
இதுதொடர்பாக சசிகுமார் அளித்த புகாரை அடுத்து அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். அன்புசெழியனுக்கு ஆதரவாகவும்,எதிராகவும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
நண்பரிடம் விசாரணை
அன்புச்செழியனை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்க, லுக் அவுட் நோட்டீஸை காவல்துறையினர் விமான நிலையங்களுக்கும் அளித்துள்ளனர். இந்நிலையில் அன்புச்செழியனின் நண்பர் முத்துக்குமாரை காவல்துறையினர் பிடித்து , தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹைதராபாத்தில் பதுங்கலா?
முத்துக்குமார் சென்னை ஜாபர்கான்பேட்டையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு வைத்துதான் முத்துக்குமாரை வளசரவாக்கம் காவல்துறையினர் வளைத்து பிடித்துள்ளனர். காவல்துறை அன்புச்செழியனை தீவிரமாக தேடிவரும் நிலையில், அன்புச்செழியனும் முத்துக்குமாரும் இணைந்து ஹைதராபாத் சென்றது தெரியவந்துள்ளது.
கோபுரம் பிலிம்ஸ் மேலாளர்
இதனிடையே அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவன மேலாளர் சாதிக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கூடிய விரையில் அன்புச்செழியன் கைது செய்வார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவி குமார் வாபஸ்
மாயவன் திரைப்பட சர்ச்சை தொடர்பாக அன்புச்செழியன் மீது காவல்துறை ஆணையாளரிடம் சி.வி.குமார் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் மாயவன் திரைப்படத்தை வெளியிடுவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கினர்.
புகாரை வாபஸ் பெற்றேன்
ரவிபிரசாத் லேபில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல் பணத்துக்காக கொடுக்கப்பட்ட ஆவணங்களைத் திரும்பத் தருவதாகவும் உறுதியளித்தனர். இந்த சூழ்நிலையின் அடிப்படையில் நான் புகாரை வாபஸ் பெறுகிறேன் என்று கூறியுள்ளார்.