பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பார்த்தசாரதி எம்.எல்.ஏ உள்ளிட்ட 19 தேமுதிகவினருக்கு ஜாமீன்
சென்னை: பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேமுதிக எம்எல்ஏ பார்த்த சாரதி உள்ளிட்ட 19 பேருக்கு ஜாமீன் அளித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடையாறில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேமுதிக சார்பில் ரத்த தான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் நடந்துக் கொண்டதாகக் கூறி பத்திரிகையாளர்களும், பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தேமுதிக அலுவலகம், விருகம்பாக்கம் கண்ணபிரான் தெருவில் உள்ள விஜயகாந்த் வீடு ஆகிய இடங்களில் பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில் விருகம்பாக்கத்தில் விஜயகாந்த் வீட்டருகே போராட்டம் நடத்துவதற்கு ஒரு பத்திரிக்கையாளர் சங்கத்தினர் கடந்த 31ம் தேதி காலை திரண்டு வந்தனர். சுமார் 50 பத்திரிக்கையாளர்கள் ஆற்காடு சாலை, அபுசாலி சாலை சந்திப்பு அருகே திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த தேமுதிக கட்சியைச் சேர்ந்த சுமார் 150 பேர், திடீரென பத்திரிகையாளர்களை நோக்கி கற்களை வீசினர். இதனால் பத்திரிகையாளர்கள் அங்கிருந்து செல்ல முற்படும்போது, தேமுதிகவினர் உருட்டுக் கட்டையால் அவர்களை விரட்டிச் சென்று தாக்கினர்.
இதனால் பத்திரிகையாளர்கள் அங்கிருந்து ஓடினர். இதைப் பார்த்து மேலும் ஆத்திரமடைந்த தேமுதிகவினர், பத்திரிகையாளர்கள் வந்த 10 மோட்டார் சைக்கிள்களையும், ஒரு காரையும் தாக்கி உடைத்தனர். இந்தச் சம்பவத்தில் 4 பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர். மேலும் இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சார்பில், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் தேமுதிகவைச் சேர்ந்த சுமார் 100 பேர் மீது 6 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக அந்தக் கட்சி நிர்வாகிகள் பார்த்தசாரதி எம்.எல்.ஏ., சதீஷ்குமார், சுகுமார், அரவிந்தன் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேமுதிக எம்எல்ஏ பார்த்த சாரதி உள்ளிட்ட 19 பேருக்கு ஜாமீன் அளித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.