மாலை 4.30 வரை சட்டசபை ஒத்தி வைப்பு.. அமைச்சரவைக் கூட்டத்தால் சபாநாயகர் அறிவிப்பு
மாலை 4.30 மணி வரை சட்டசபையை ஒத்தி வைத்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
சென்னை: அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதால் மாலை 4.30 மணி வரை சட்டசபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதக் கூட்டம் நடைபெறுகிறது. 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் சட்டசபை தொடங்கியது.
சட்டசபை கூட்டத்தின் போது தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையாளர்களிடம் லஞ்சம் பெற்றது தொடர்பான கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் எழுப்பினார். இதனை விவாதிக்க சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட போதைப்பொருள் குட்கா விற்பனையாளர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பலகோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார்.
மீண்டும் சட்டசபைக்குள் திமுகவினர் சென்ற நிலையில், தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து, அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதால் மாலை 4.30 மணி வரை சட்டசபை ஒத்தி வைக்கப்படுகிறது என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.