குட்கா விவகாரம்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்களுக்கு சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்களுக்கு சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமைச்செயலகத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடந்த உரிமைக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்காவை ஜூலை 19ஆம் திமுக உறுப்பினர்கள் 21 பேர் சட்டசபைக்கு கொண்டுவந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. குட்கா கொண்டு வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 உறுப்பினர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவை உரிமைக்குழு கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஸ்டாலின் மீதே புகார் உள்ளதால் உரிமைக்குழு கூட்டத்தில் பங்கேற்க அவருக்கு அழைப்பு அனுப்படவில்லை.
இந்த கூட்டத்தை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் புறக்கணித்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேரும் திமுக எம்எல்ஏக்கள் 5 பேரும் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.
அவையில் உரிமை மீறியதாக சட்டசபையில் பதிவான வீடியோவின் அடிப்படையில் விசாரித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ்க்கு 7 நாட்களுக்குள் பதில் தர வேண்டும்.
இதனையடுத்து திமுக எம்எல்ஏக்களின் விளக்கத்தை கேட்கும். இதனை அடுத்து உரிமைக்குழு தலைவர் பொள்ளாட்சி ஜெயராமன், சபாநாயகருக்கு தனது பரிந்துரையை அளிப்பார்.
உரிமைக்குழுவின் பரிந்துரையை ஏற்று திமுக எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கலாம். உரிமைக்குழுவின் பரிந்துரையை ஏற்பதும், ஏற்காததும் சபாநாயகரின் இறுதி முடிவாகும்.