இப்படியே நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்.. விஜயதாரணிக்கு சபாநாயகர் எச்சரிக்கை
சென்னை: சட்டசபையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கொறடா விஜயதாரணிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கொறடாவான விஜயதாரணி, டிவி விவாதங்களில் கூட பிறர் பேசும் நேரத்தையும் தனக்கு எடுத்துக் கொண்டு, ஆக்ரோஷமாக பேசக்கூடியவர். சட்டசபையிலும் அவர் துடுக்காக எல்லோர் பேச்சிலும் குறுக்கிடுவது வழக்கம்.
இன்றைய சட்டசபை விவாதத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலுரை வழங்கிக் கொண்டிருந்தபோது, விஜயதாரணி அடிக்கடி குறுக்கிட்டு பேசுவதற்கு முயன்றார்.
அமைச்சர் ஒருவர் பதிலுரை வழங்கும்போது யாரும் குறுக்கே பேசக்கூடாது என்ற மரபை சுட்டிக் காட்டி, சட்டசபை தலைவர் தனபால், விஜயதாரணியை கண்டித்தார்.
காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இன்று பேச வாய்ப்பு கிடையாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், விஜயதரணி சொல்பேச்சு கேட்பதாக இல்லை. மானியக் கோரிக்கையில் பேச வாய்ப்பு கேட்டு தொடர்ந்து கோஷமிட்டபடியே இருந்தார்.
அனுமதி மறுத்த சபாநாயகர், உறுப்பினர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்றும், தொடர்ந்து அவைக்கு இடையூறு செய்தால் விஜயதாரணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தார்.