கொடநாடு எஸ்டேட் மூடப்பட்டது... போயஸ், சிறுதாவூர் பங்களாக்களுக்கு பாதுகாப்பு
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் முடக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் மூடப்பட்டுள்ளது.
இது தவிர ஜெயலலிதாவிற்கு சொந்தமான போயஸ்கார்டன், பையனூர், சிறுதாவூர் பங்களாக்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் 211 அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் முக்கிய சொத்துக்களின் ஒன்றான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட் ஆகும். இங்குதான் கோடைகாலத்தில் ஜெயலலிதா சென்று ஓய்வெடுப்பார்.
கொடநாடு எஸ்டேட்
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடன் எஸ்டேட்டின் முக்கிய நுழைவு வாயில்கள் மூடப்பட்டன. இதனையடுத்து அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
கொடநாடு காட்சி முனைக்குச் செல்லும் பிரதான சாலையில் கூட ஆட்கள் நடமாட்டம் இல்லை. எஸ்டேட் அருகில் உள்ளூர் போலீசார் மூன்று பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போயஸ்கார்டன் வேதாநிலையம்
ஜெயலலிதா வசித்து வரும் சென்னை போயஸ்கார்டன் பகுதியில் உள்ள வேதாநிலையம் பங்களாவிற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார்கள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை பலத்த பாதுகாப்பிற்குப் பின்னரே அனுமதிக்கின்றனர். இதனால் அப்பகுதிவாசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சிறுதாவூர் பங்களா
ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்கும் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே 136 ஏக்கரில், சிறுதாவூர் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் மூன்று டி.எஸ்.பிக்கள், இரண்டு இன்ஸ்பெக்டர்கள் எட்டு சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 55 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
பையனூர் பங்களா
அதேபோல பையனூரில் 10 ஏக்கர் பரப்பளவில் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் 10 ஆண்டுகளாக யாருமே இல்லை என்று கூறுகின்றனர். இந்த பங்களா வெறிச்சோடி காணப்படுவதால் அங்கு யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை.