தாயை இழந்து தவித்த சிறுவனுக்கு பாதுகாவலரான காவல் உதவி ஆணையர் பாலமுருகன்.. சென்னையில் நெகிழ்ச்சி!
சென்னை ஓட்டேரியில் தாய் கொலை செய்யப்பட்டதால் பரிதவித்து நின்ற சிறுவனுக்கு காவல் உதவி ஆணையர் பாலமுருகன் பாதுகாவலரான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: ஓட்டேரியில் தாய் கொலை செய்யப்பட்டதால் பரிதவித்து நின்ற சிறுவனுக்கு காவல் உதவி ஆணையர் பாலமுருகன் பாதுகாவலரான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரியில் சுப்ராயன் 4 வது தெருவை சேர்ந்தவர் பரிமளா. இவரது கணவர் கோவிந்தராஜன்.
இவர்களுக்கு 13 வயதில் கார்த்திக் என்ற மகன் உள்ளான். கணவர் இறந்த நிலையில் பரிமளா தனது மகனை மயிலாப்பூரில் உள்ள விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்து வந்தார்.
கடந்த 31ஆம் தேதி
பரிமளா ஓட்டேரியில் தனியாக வாடகைக்கு வீடெடுத்து தங்கி வசித்து வந்தார். இந்த நிலையில் பரிமளா வசித்து வந்த வீட்டின் மேல் தளத்தில் பாக்கியம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி இரவு பரிமளாவுக்கும் பாக்கியத்திற்கும் தகராறு முற்றியது. இதனால் பாக்கியத்தை பரிமளா திட்டியுள்ளார்.
பரிமளா கொலை
இதனால் ஆத்திரமடைந்த பாக்கியத்தின் 17 வயது மகன் சூர்யா, பரிமளாவை 15 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். பரிமளாவின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பரிமளாவை சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிமளா பரிதபமாக உயிரிழந்தார்.
கவலைப்பட்ட காவல்துறை
இதைத்தொடர்ந்து விடுதியில் தங்கி படித்த பரிமாளவின் மகன் கார்த்திக் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். ஏற்கனவே தந்தையை இழந்த கார்த்திக் தாயை பறிகொடுத்த சம்பவத்தை அறிந்தால் நிலை குலைந்து விடுவார் என கவலைப்பட்டனர் காவல்துறையினர்.
உதவி ஆணையர் பாலமுருகன்
மெதுவாக கடந்து கொண்டிருந்தது நேரம். அயனாவரம் காவல் சரக உதவி ஆணையரான எம்.பாலமுருகன் காவல் நிலையத்திற்கு வந்தார். தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளரிடம் பெண் கொலை குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதா என கேட்டுள்ளார்.
மகன் மட்டுமே உள்ளார்
அதற்கு கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு சொந்தம் என சொல்லிக்கொள்ள ஒரு மகன் மட்டுமே உள்ளார். அவரை அழைத்து வந்துள்ளோம் என சிறுவன் கார்த்திக்கை காட்டினர். சிறுவனிடம் இதுவரை எதையும் கூறவில்லை என தெரிவித்துள்ளார் காவல் ஆய்வாளர்.
கவலைப்படாதே நான் இருக்கிறேன்
உடனடியாக சிறுவன் கார்த்திக்கிடம் அவனது தாய் கொல்லப்பட்ட செய்தியை தெரிவித்தார் உதவி ஆணையர் பாலமுருகன். இதைக் கேட்ட சிறுவன் நிலை குலைந்தான். கதறி அழவோ கூச்சலிடவோ தெரியாமல் ஆதரவின்றி போயிவிட்டோமே என இடிந்து உறைந்தான் சிறுவன் கார்த்திக். இதனைக் கண்ட உதவி ஆணையர் பாலமுருகன் சிறுவனை சமாதானம் செய்தார். நீ கவலைப்படாதே, உன் அம்மா இருந்து செய்வதைவிட அதிகமாக செய்வோம் கூறிவிட்டு வீட்டிற்கு சென்றார் பாலமுருகன்.
தூக்கமின்றி தவித்த பாலமுருகன்
சிறுவனை சமாதானம் செய்துவிட்டு சென்றாலும் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தார் பாலமுருகன். யாரும் இல்லாத சிறுவன் எதிர்காலத்தில் பழிக்கு பழியாக கொலைகாரனாகிவிட்டால் என்ன செய்வது என யோசித்தப்படியே சூழ்நிலையை மனைவியிடம் கூறினார் பாலமுருகன்.
நான்தான் இனி எல்லாம்
சிறுவனை நாம்தான் ஆதரிக்க வேண்டும் என கூறியதற்கு சம்மதம் தெரிவித்தார் பாலமுருகனின் மனைவி. அடுத்த நாள் காலையிலேயே சிறுவன் தங்கி இருக்கும் விடுதிக்குச் சென்ற பாலமுருகன் அங்குள்ள நிர்வாகிகளிடம், கார்த்திக்கின் முழு பாதுகாவலன் இனி நான்தான் என்றும் அந்த சிறுவனுக்கு என்ன செய்ய வேண்டுமானாலும் நானே செய்வேன் எனவும் எழுதி கொடுத்துவிட்டு, தனது செல்போன் எண்களையும் கொடுத்துள்ளார்.
என்னுடைய இன்னொரு மகன்
அன்றே கார்த்திக்கை தனது வீட்டுக்கு அழைத்து சென்று உணவளித்த பாலமுருகன், தனது மகனுக்குள்ள உடைகளை கார்த்திக்கும் அளித்தார். தற்போது கார்த்திக்கும் தனது இன்னொரு மகன்தான் என ஆனந்தமாக தெரிவித்துள்ளார் பாலமுருகன்.
தத்தெடுக்க முடிவு
சிறுவனுக்கு உறவினர்கள் யாரும் உள்ளனரா என்பதை ஆய்வு செய்தபின், எதிர்காலத்தில் சட்டப்படி கார்த்திக்கை மகனாக தத்தெடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார் பாலமுருகன். ஆதரவின்றி தவித்த சிறுவனுக்கு பாதுகாவலரான காவல் உதவி ஆணையர் பாலமுருகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பாலமுருகனுக்கு சல்யூட்!
லாக் அப் டெத்துகள் அதிகரித்து வரும் நிலையில், தாய் தந்தையை இழந்து எந்த ஆதரவும் இன்றி தவித்த சிறுவனுக்கு காவல் உதவி ஆணையர் பாலமுருகன் பாதுகாவலரான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை மக்களின் நண்பன் என்பதை உறுதிப்படுத்திய உதவி ஆணையர் பாலமுருகனுக்கு சல்யூட்..!!!