அரசு கல்லூரியில் எம்பில் சேர வந்த மாணவிக்கு பேராசிரியரால் நேர்ந்த அவமானம்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
செய்யாறு அரசு கல்லூரியில் எம்பில் சேர வந்த மாணவியை பேராசிரியர் அவமதித்ததால் எம்பில் சேராமல் திரும்பிச் சென்றார்.
Recommended Video
திருவண்ணாமலை: செய்யாறு அரசு கல்லூரியில் வேதியியல் துறையில் எம்பில் சேர்வதற்கு வந்த மாணவியை பேராசிரியர் ஒருவர் அவமரியாதையாக பேசியதால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகி எம்பில் சேராமலே திரும்பிச் சென்றுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2018 -19 கல்வி ஆண்டுக்கான எம்பில் பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை நடைபெற்றுவருகிறது.
செய்யாறு அரசு கல்லூரியில் வேதியியல் துறையில் எம்பில் படிப்புக்காக மொத்தம் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 6 மாணவர்கள் மட்டுமே வேதியியல் எம்பில் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இடம் உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை வேதியியல் துறையில் எம்பில் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், செய்யாறைச் சேர்ந்த மாணவி அனன்யா (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏற்கெனவே செய்யாறு அரசு கல்லூரியில் 2013 ஆண்டு எம்.எஸ்சி வேதியியல் படித்துள்ளார். அப்போது அவர் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, குடும்பச் சூழல் காரணமாக படிப்பைத் தொடர முடியாததால், இடையில் நின்றுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். ஒராண்டு தனியார் பள்ளி ஒன்றில் வேலை செய்த மாணவி அனன்யா பின்னர், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி சேர்ந்து படித்து பட்டம் பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து, செய்யாறு கல்லூரியில் வேதியியல் துறையில், எம்பில் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவி அனன்யா வேதியியல் துறையில் எம்பில் படிப்பில் சேர இன்று கல்லூரிக்கு வந்துள்ளார்.
அப்போது, மாணவி அனன்யாவை உதவி பேராசிரியர் மகேஷ் என்பவர் "நீ எதற்கு கல்லூரிக்கு வந்தாய்? உன்னையெல்லாம் இங்கே யார் அழைத்தார்கள்? ஏற்கெனவே நீ எம்எஸ்சி பாதியில் நின்றுவிட்டதால் உன்னைப் பார்த்து 4 பெண்கள் ஓடிவிட்டார்கள். உனக்கு சீட் கிடையாது என்று மாணவர்கள் பலர் முன்னிலையில் அவமரியாதையாக பேசி திட்டியுள்ளார். இதனால், அவமானம் அடைந்த மாணவி மன உளைச்சல் ஏற்பட்டு அழுதுள்ளார். பின்னர், அவர் எம்பில் சேராமலேயே வீட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாணவி குடும்பச் சூழல் காரணமாக படிப்பை தொடர முடியாமல் இடையில் நின்றுள்ளார் இதை காரணம் காட்டி மாணவியை திட்டியது மட்டுமில்லாமல், அவருக்கு எம்பில் சேர்க்கை இல்லை என்று கூறியது மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்யாறு அரசு கலைக்கல்லூரி வேதியியல் துறை தலைவர் சி.டி.ரவிச்சந்திரனிடம் பேசினோம். அவர் கூறியதாவது: அந்த பெண்ணின் குடும்பச் சூழல் ஏழ்மை பற்றி எனக்கும் தெரியும். அவர் எம்எஸ்சி படிக்கும்போது இடையில் நின்றுவிட்டார். அதனால், ஒரு சீட் வீணானது பற்றி அந்த பேராசிரியர் பேசியிருக்கலாம்.
இப்போதுகூட அந்த பெண்ணை வரச்சொல்லுங்கள், அவரை எம்பில் படிப்பில் சேர்த்துவிடலாம். இதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்த மாணவியை பேராசிரியர் மகேஷ் அவமரியாதையாக பேசியது குறித்து எதுவும் எனக்கு தெரியாது. நாங்கள் அந்த பெண்ணுக்கு சீட் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம்." என்று கூறினார்.
எம்பில் சேர வந்த மாணவியை பேராசிரியர் அவமதித்த விவகாரம் பற்றி செய்யாறு அரசு கலைக்கல்லூரி முதல்வர் எழிலனிடம் பேசினோம். "இது குறித்து தகவல் இன்னும் எனது கவனத்துக்கு வரவில்லை. நிச்சயமாக இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்" என்று உறுதியளித்தார்.
ஒரு மாணவி கடந்த காலங்களில் குடும்பச் சூழல் காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் இடையில் நின்றுள்ளார். பிறகு அந்த படிப்பை வேறு கல்வி நிறுவனத்தில் படித்து முடித்த பின்னர், மீண்டும் இடையில் நின்ற கல்லூரியில் மேற்படிப்புக்காக சேர்க்கைக்கு வரும்போது அவருக்கு வாய்ப்பை மறுப்பதோடு அவமதிப்பது எந்த வகையில் நியாயம் என்று மாணவர்களிடையே பெரிய கேள்வி எழுந்துள்ளது.
மாணவி அனன்யாவை பலர் முன்னிலையில் அவமதித்து திட்டிய உதவிப் பேராசியர் மீது கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.