சசி போல ஜாலியாக ஷாப்பிங் போன சுகேஷ்.. உதவிய போலீசார் கைது - ஐவர் சஸ்பெண்ட்
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பெங்களூரில் ஷாப்பிங் செல்ல உதவியதாக 2 போலீஸார் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பெங்களூரில் ஷாப்பிங் செய்ய அனுமதித்ததாக 2 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இரட்டை இலை சின்னத்துக்கு அதிமுகவின் இரு அணிகளும் உரிமை கோரியதால் அச்சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்நிலையில் இரட்டை இலையை பெற்றே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிய டிடிவி தினகரன், டெல்லியில் உள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அணுகியதாக தெரிகிறது.
அப்போது அவர் தேர்தல் ஆணையத்தில் உயரதிகாரிகள் தனக்கு தெரியும் என்றும் அவர்களுக்கு பணம் கொடுத்தால் இரட்டை இலை சின்னம் கிடைத்து விடும் என்று கூறியுள்ளார். இதனால் தினகரன் அவருக்கு முன்பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
தினகரனுக்கு ஜாமீன்
இதுதொடர்பாக தகவலறிந்த டெல்லி போலீஸார் சுகேஷை மடக்கி பிடித்தனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனையும் கைது செய்தனர். திகார் சிறையில் அடைக்கப்பட்ட தினகரன் ஒரு மாதம் கழித்து ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.
விசாரணைக்காக பெங்களூர்
எனினும் சுகேஷ் சிறையில்தான் உள்ளார். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சுகேஷிடம் விசாரணை நடத்த அவரை பெங்களூருக்கு அழைத்து சென்றனர்.
2 பேர் கைது
அப்போது சுகேஷ் பெங்களூரில் ஷாப்பிங் செய்ய காவலர்கள் உதவியதாக புகார் எழுந்தது. அந்த புகாரில் காவல் துறையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்த டெல்லி போலீஸ் அவர்களை சிறையில் அடைத்தது. அதேபோல் மேலும் 5 காவலர்கள் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பெங்களூர் ஷாப்பிங்
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவும் இதே போல் ஹாயாக ஷாப்பிங் செய்து விட்டு சிறைக்கு சென்ற வீடியோ வைரலாகியது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ கர்நாடக போலீஸாருக்கு மிகப் பெரிய தலைவலியை கொடுத்தது.