தைப்பூச திருவிழா : பழனி, மலேசியா, மற்றும் இலங்கையிலிருந்து 50 மணிநேர நேரடி ஒளிபரப்பு
சென்னை: பழனி, மலேசியா, இலங்கையில் இருந்து தைப்பூச திருவிழாவை 50 மணிநேரம் இடைவிடாமல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது ஆஸ்ட்ரோ உலக இணையதளம். மலேசியாவிலுள்ள பத்துமலை-கோலாலம்பூர், தண்ணீர் மலை- பினாங்கு, கல்லுமலை-ஈப்போவில் நடைபெறும் தைப்பூச விழா கொண்டாட்டங்களை மட்டுமல்லாமல், முதன் முறையாக இலங்கையிலுள்ள நல்லூர், இணுவில், கதிர்காமம் மற்றும் இந்தியாவிலுள்ள பழனியில் ஆகிய இடங்களில் நடைபெறும் தைப்பூச கொண்டாட்டங்களை பல வண்ணமயமாக இன்று இரவு முதல் ஜனவரி 24 வரை ஆஸ்ட்ரோ உலகம் முகநூல் பக்கத்திலும் நேயர்கள் கண்டு ரசிக்கலாம்
தைப்பூசம் அதிகமாக தமிழ் சமூகத்தினரால் தை மாத பௌணர்மி அன்று கொண்டாடப்படுகின்ற சமய பண்டிகையாகும். தமிழ் சமூகத்தினர் கணிசமான எண்ணிக்கையில் வாழும் நாடுகளில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில்(ஜனவரி அல்லது பிப்ரவரி) பூச நட்சத்திரத்தன்று பெளர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மூண்ட போரில் தேவர்கள் தோல்வியைத் தழுவினர். பல இன்னல்களைக் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவப்பெருமானிடம் தேவர்கள் முறையிட்டபோது அவர் தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே முருகன்.
ஞானவேல் வழங்கிய நாள்
சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 குழைந்தைகளாகி கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர்தான் கந்தன். பழனி மலையில் ஆண்டி கோலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு அன்னை பார்வதி ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான் என்பது குறிப்பிடதக்கது.
பழனியில் கொண்டாட்டம்
தங்களின் வேண்டுதலுக்கு பலன் அளித்து காத்த கருணையே வடிவமான கந்தனுக்கு நன்றி கூறும் வகையில் காவடி ஏந்துதல், பால்குடம் எடுத்தல், மொட்டை போடுதல் போன்ற காணிக்கைகளைத் தைப்பூசத்தன்று முருகன் பக்தர்கள் செலுத்துகின்றனர். தமிழகத்தில் பழனி மட்டுமல்லாது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும், சிவ ஆலயங்களிலும் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
தைப்பூசம் நேரடி ஒளிபரப்பு
தமிழகத்தை தவிர்த்து மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை போன்ற நாடுகளில் தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாகவும் வண்ணமயமாகவும் கொண்டாடப்படுகிறது. மலேசியாவிலுள்ள பத்துமலை-கோலாலம்பூர், தண்ணீர் மலை- பினாங்கு, கல்லுமலை-ஈப்போவில் நடைபெறும் தைப்பூச விழா கொண்டாட்டங்களை மட்டுமல்லாமல், முதன் முறையாக இலங்கையிலுள்ள நல்லூர், இணுவில், கதிர்காமம் மற்றும் இந்தியாவிலுள்ள பழனியில் ஆகிய இடங்களில் நடைபெறும் தைப்பூச கொண்டாட்டங்களை பல வண்ணமயமாக இன்று இரவு முதல் ஜனவரி 24 வரை ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் நேயர்கள் கண்டு ரசிக்கலாம்
50 மணிநேர ஒளிபரப்பு
கடந்த 2015ஆம் ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தை, ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மலேசியா ரசிகர்கள், மற்றும் இந்தியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, அமேரிக்கா, லண்டன், கனடா மற்றும் இன்னும் பல நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தின் வழி கண்டு களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்ட்ரோ உலகம் 41.4 மில்லியன் முகநூல் ரசிகர்களை பதிவு செய்த வேளையில், மலேசிய சாதனை பதிவேட்டில் "நேரடி ஸ்ட்டிரிமிங் வழி அதிக முகநூல் ரசிகர்களை சென்றடைந்த ஒரு தமிழ் நிகழ்ச்சியாக" தடம் பதித்தது. இவ்வருடம், ஆஸ்ட்ரோ உலகம் 2016 தைப்பூச விழாவை "50-மணிநேர தடையில்லாத நேரடி இணையத்தள ஒளிபரப்பை (வீடியோ)" வழங்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற களமிறங்கியுள்ளது.
Look who is hosting our 50 hours live streaming from Batu Caves! #VetriVel2016
Posted by Astro Ulagam on Friday, January 22, 2016
திருமுருகாற்றுப்படை
இவ்வருடம் ஆஸ்ட்ரோ ‘திருமுருகாற்றுப்படை' என்பதை கருபொருளாகக் கொண்டு தனது தைப்பூசக் கொண்டாட்டப் படைப்படை ஒளியேற்றவிருக்கிறது. திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இந்த 2016 தைப்பூச நேரடி ஒளிபரப்பில் டாக்டர் திலகவதி மற்றும் திரு.கார்த்திகேசு பொன்னையா இருவரும், "திருமுருகாற்றுப்படை" பற்றிய சாரத்தையும் ஆஸ்ட்ரோ உலகம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில்
அதுமட்டுமல்லாமல், முகநூல், ட்வீட்டர் மற்றும் இன்ஸ்டாகிரேம் போன்ற சமூக வளைத்தளங்கலில் #VetriVel2016 என்று குறியீட்டில் பதிவு செய்யும் படங்கள், ஆஸ்ட்ரோ உலக இணையத்தள அகப்பக்கத்தில் இடம்பெறும். மேலும் பத்துமலை மற்றும் பினாங்கில் வைக்கப்படும் ஆஸ்ட்ரோ வெளிப்புற காட்சி திரைகளில் இந்த படங்கள் இடம்பெறுவதோடு மட்டுமல்லாமல், அத்தளத்திலுள்ள ரசிகர்களும் இந்த கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக இணைந்து மேலும் இதர இடங்களின் தைப்பூச விழா நிலவரங்களை அறிந்து கொள்ளலாம்.