யமுனாவுக்காக 5 கொலைகள்.... சொத்துக்காக யமுனாவை கொலை செய்ய திட்டமிட்ட சாமியார் கண்ணன்
திருச்சி, திருவானைக்காவல், அகிலாண்டேஸ்வரி நகரைச் சேர்ந்தவர், தங்கவேல். இவரது மனைவியுடன் ஸ்ரீரங்கம், பாரதிநகரைச் சேர்ந்த, சாமியார் கண்ணனுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கள்ளத் தொடர்பினால் தங்கவேலுவையும், இவரது மகள் சத்யா, மகன், செல்வக்குமார், ஆகியோரை கொலை செய்துள்ளான். அதேபோல ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ், அவரது கார் டிரைவர் சக்திவேல் ஆகியோரை, கொலை செய்துள்ளான் கண்ணன்.
இந்த கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட கண்ணனை திருச்சி, சி.பி.சி.ஐ.டி., போலீசார், மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து, விசாரிக்கின்றனர்.
தி.மு.க., முன்னாள் அமைச்சர், நேருவின் தம்பி ராமஜெயம் கொலை; ஸ்ரீரங்கம், கந்தன்நகர் லலிதாதேவி கொலை; காவிரி பாலத்தின் அடியில் பெண் எரித்துக் கொலை ஆகிய, கொலை சம்பவங்கள் தொடர்பாக, கண்ணனிடம் விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் கண்ணன் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாமியாருடன் தொடர்பு
தொழில் நஷ்டம் காரணமாக, தங்கவேல், நாமக்கல் ஜோதிடரிடம் பரிகாரம் செய்ய சென்றுள்ளார். அந்த ஜோதிடர் மூலம், தங்கவேலுவுக்கு, கண்ணன் அறிமுகமாகி உள்ளார். தங்கவேல் வீட்டிற்கு, பூஜைகள் செய்யச் சென்ற கண்ணன், அவர் வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது மனைவி யமுனாவுடன் பழகியுள்ளார். நாளடைவில், இது, கள்ளக்காதலாக மாறியுள்ளது.
கழுத்து அறுத்து கொலை
கள்ளத் தொடர்புக்கு, தங்கவேல், இடையூறாக இருப்பதாக, யமுனா கூறியுள்ளார். இதனால், சிறப்பு பூஜை செய்வதாக கூறி, சமயபுரத்தில் இருந்து, 2 கி.மீ.,யில், ஆள் நடமாட்டம் இல்லாத, வனப்பகுதிக்கு, தங்கவேலை, இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். அங்கு, பள்ளம் ஒன்றில், தங்கவேலை உட்கார வைத்து, எலுமிச்சை பழங்களை, கையில் வைத்துக் கொண்டு, பின்னால் கைகளை கட்டி, கண்களை மூடி, குல தெய்வத்தை வழிபடுமாறு கூறியுள்ளார். கண்ணன் கூறியபடி, கண்களை மூடி, வழிபாட்டில் ஈடுபட்ட தங்கவேலை, மறைத்து வைத்திருந்த கத்தியால், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின், அந்த பள்ளத்திலேயே, தங்கவேல் உடலை புதைத்துள்ளார்.
துரைராஜ் கொலை
தங்கவேல் வாங்கிய கடன் தொகையை, திருப்பி கேட்டு, யமுனாவுக்கு தொல்லை கொடுத்த துரைராஜ், அவரது கார் டிரைவர் சக்திவேல் ஆகியோரை, வீட்டில் வைத்து, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின், வையம்பட்டி அருகே, காரில் வைத்து எரித்துள்ளார். இந்த கொலைகளுக்கு, வீரேஸ்வரத்தைச் சேர்ந்த, சரவணன், முத்துகாத்தான் ஆகியோர், உதவியுள்ளனர்.
மகன் - மகள் கொலை
துரைராஜையும், அவரது கார் டிரைவரையும் கொலை செய்தது, யமுனாவின் மகன் செல்வக்குமார், மகள் சத்யாவிற்கும் தெரியும். வீட்டை அடமானம் வைத்து, பணம் பெறுவதில் தகராறு ஏற்பட்டதால், "துரைராஜ் கொலையை, போலீசில் கூறுவேன்' என, யமுனாவை செல்வக்குமார் மிரட்டியுள்ளார். மேலும், " நம் வீட்டுக்கு, கண்ணன் வர கூடாது' எனவும்செல்வக்குமார் கண்டித்துள்ளார். இதனால் செல்வக்குமாரை போட்டு தள்ளிவிட்டார் கண்ணன். அதேபோல் காணாமல் போன செல்வக்குமாரை பற்றி யமுனாவிடம் மகள் சத்யா விசாரிக்கவே அவரையும் கொலை செய்துள்ளார் கண்ணன்.
பல கோடி சொத்துக்கள்
கண்ணனின் தந்தை ஸ்ரீரங்கத்தில் கொல்லுபட்டறை நடத்தி வந்தார். அப்போது கண்ணன் ஊர் சுற்றி வந்துள்ளார். பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி, கராத்தே, வர்ம கலை கற்க கேரளா சென்றார். ஜோதிடமும் கற்றார். கேரளாவில் இருந்து வந்து பல கோயில்களுக்கு சென்று ஆன்மிகவாதியாக காட்டி கொண்டார். அப்போதுதான் 10 ஆண்டுக்கு முன்பு வைர வியாபாரி தங்கவேல் , யமுனா தம்பதியுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் யமுனாவின் மேல் உள்ள மோகம் குறைந்து கண்ணன் வேறு பல பெண்களுடன் தொடர்பு வைத்தார். இதற்கு பணம் தேவைப்பட்டதால் யமுனாவின் சொத்துக்களை அபகரிக்க திட்டம் போட்டுள்ளார். யமுனா வசித்த வீட்டின் மதிப்பு ரூ.2 கோடி. தவிர திருச்சி கள்ளதெருவில் யமுனாவுக்கு ஒரு காலிமனை உள்ளது. அதன் மதிப்பு ரூ.1 கோடி.
அதை விற்க முடிவு செய்து ரூ.10 லட்சம் அட்வான்ஸ் வாங்கி வந்துள்ளார். யமுனாவை வெளியூர் அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டு சொத்துக்களை அபகரிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் போலீசில் சிக்கிக்கொண்டான்.
ராமஜெயம் கொலை
5 பேரை யமுனாவிற்காக கொலை செய்ததை ஒத்துக் கொண்ட கண்ணன், ராமஜெயம் கொலையை நான் செய்யவே இல்லை என மறுக்கிறானாம். ஆனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிபிசிஐடி திணறல்
இதனிடையே செல்வகுமார், சத்யா கொலைவழக்கினை புலிவலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்குகளையும் வெள்ளிக்கிழமையே சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் வழக்குத் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்படவில்லையாம். இதனால் அந்த கொலைகள் தொடர்பாக கண்ணனிடம் விசாரிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனராம். இன்று மாலை 4 மணிக்கு கண்ணனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதால் மறுபடியும் காவலில் எடுத்து செல்வக்குமார், சத்யா கொலை தொடர்பாக விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல கொலைகளுக்கு உடந்தையாக இருந்த யமுனாவையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனராம்.
லதா கெலை வழக்கு
ஸ்ரீரங்கம் கந்தன் நகரில் தனியாக வசித்து வந்த லதா (48) என்பவர் கடந்த ஆண்டு ஜனவரி 23ம் தேதி கொல்லப்பட்டு கிடந்தார் இந்த கொலையும் கண்ணன் பாணியில் செய்யப்பட்டு உள்ளதால், லதாவையும் கண்ணன்தான் கொலை செய்திருப்பார் என சந்தேகம் எழுந்துள்ளது. துரைராஜ், சக்திவேல் ஆகியோரை கொலை செய்த போது கண்ணனுக்கு உதவி செய்த சரவணன், 5 கொலைகளையும் பார்த்த யமுனா இருவரும் கண்ணனுடன் சேர்ந்தவர்கள். இவர்கள் அப்ரூவர் ஆனால்தான் கொலைகளை நிரூபிக்க முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.