தினகரனை ஆட்டுவிக்கும் சசி ஜோதிடர்கள்! பிரசார திசை, நேரத்தையும் குறித்து கொடுக்கிறார்களாம்!
ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன், தமது சின்னம் முதல் பிரசார நேரம் வரையில் அனைத்திலும் ஜோதிடர்களின் ஆலோசனைப்படி மட்டுமே செயல்பட்டு வருகிறாராம்.
சென்னை: தொப்பி சின்னத்தை தேர்வு செய்தது முதல் பிரசாரம் செய்யும் திசை, நேரம் என ஒவ்வொரு நகர்வையுமே சசிகலாவின் ஜோதிடர்களின் ஆலோசனையின்படியே செயல்படுகிறாராம் டிடிவி தினகரன்.
சசிகலா சிறைக்குப் போன நிலையில் அதிமுகவையும் ஆட்சியையும் முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் படுமும்முரமாக இருப்பவர் தினகரன். திவாகரன் உள்ளிட்ட அனைத்து மன்னார்குடி உறவுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டார் தினகரன்.
நோ சசி படம்
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் மறந்தும் கூட சசிகலா படம் இருந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறார் தினகரன். இது சசிகலாவை கடுமையாக அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
ஜோதிடர்களுடன் ஆலோசனை
மற்றொருபுறம் தாம் எடுத்து வைக்கும் அனைத்து நகர்வுகளிலும் வெல்ல வேண்டும் என்பதிலும் படுதீவிரமாக இருக்கிறாராம் தினகரன். இதற்காக சசிகலாவின் ஆஸ்தான ஜோதிடர்களை நாள்தோறும் தமது வீட்டுக்கு வரவழைத்துவிடுகிறாராம் தினகரன்.
தொப்பி சின்னம்
சசிகலா அணிக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை தேர்தல் ஆணையம் முதலில் ஒதுக்கியது. அப்போது இரும்பு பொருட்கள் உங்களுக்கு ஆகாது என கூறி தொப்பி சின்னத்தை தேர்வு செய்ய ஆலோசனை சொன்னதும் இதே ஜோதிடர்கள்தானாம்.
பிரசார திசை, நேரம்
அதேபோல் தினகரன் எந்த திசையில் இருந்து பிரசாரத்தை தொடங்க வேண்டும்; எந்த திசையில் எத்தனை மணிக்கு பிரசாரத்தை முடிக்க வேண்டும் என்பதையும் ஜோதிடர்களே தீர்மானித்து சொல்கின்றனராம். தாங்கள் சொல்வதை இம்மிபிசகாமல் தினகரன் செய்து வருவதால நம்ம காட்டில் நல்ல மழை என மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்களாம் ஜோதிடர்கள்.