எத்தனை எத்தனை ஜோதிடம், யாக நம்பிக்கைகள்... எதுவுமே "அம்மாவை" காப்பாத்தலையே!!
சென்னை: ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட தீர்ப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் எத்தனை எத்தனை 'ஆன்மீக' பிரார்த்தனைகளை ஜெயலலிதா நடத்தியிருப்பார்...எதுவுமே 'அம்மாவை' காப்பாற்றவில்லையே என்ற அங்கலாய்ப்பில் இருக்கின்றனர் அதிமுகவினர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பால் நிலைகுலைந்து போயிருக்கிறது அதிமுக. தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் அதிமுகவினர் நடத்திய அராஜகங்களிலேயே அவர்கள் கட்டுப்பாடற்றவர்களாக வெறிபிடித்தவர்களாக அலைந்து திரிந்ததை காண முடிந்தது.
ஏறாத கோயில் இல்லை..
அதிமுக ஒரு திராவிடக் கட்சிதான் என்றாலும் அதன் தலைமை ஆன்மீகத்தின் மீது அதீதமான நம்பிக்கை கொண்டிருந்தது. ஜெயலலிதா ஏறாத கோயில்லை... நடத்தாத யாகமில்லை... கணிக்காத ஜோதிடமில்லை...
ஜோதிடருக்கு பணம்
சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள ஜோதிடர் பணிக்கருக்கு ஜெயலலிதா ரூ10 லட்சம் பரிசு கொடுத்த செய்தி ஒன்று வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
சசிகலாவும்தான்..
ஜெயலலிதாவுக்கு இணையாக கோயில் கோயிலாக ஏறி இறங்கியவர் சசிகலா. ஆனால் இந்த யாகங்களும் ஜோதிட கணிப்புகளும் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் வழிபட்ட சாமிகளும் எதுவுமே ஜெயலலிதாவை காப்பாற்றவில்லை.
ஆஜராக நல்ல நேரம்
அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு கூட நல்ல நேரம், ராகு காலம் எமகண்டம் பார்த்தும் எதுவும் அவரை சிறைக்குப் போவதில் இருந்து தப்பிக்க வைக்கவில்லை.
ராசி எண்
குறிப்பாக பெங்களூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் நாள் 27. இதன் கூட்டு எண் 9. ஜெயலலிதாவுக்கு ராசி எண் என்றெல்லாம் கூட நம்பிக்கைகள் ரெக்கை கெட்டிப் பறந்தன.
காப்பாத்தலையே
தீர்ப்பு நேரத்தை வைத்து கூட ஆருடங்கள் அணிவகுத்தன..ம்ஹூம்.. ஒன்னும் கை கொடுக்கலை... இதனால்தான் நொந்து போய் கிடக்கும் அதிமுகவினர், எத்தனை சாமியைக் கும்பிட்டும் ஒன்னு கூட எங்க அம்மாவை காப்பாத்தலையே..." என்று குமுறி கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.