கடவுளே எனது மகளின் உயிரை திருப்பிக் கொடு - தாயார் கதறல்
அஸ்வினியை கொன்றவனை சும்மாவே விடக் கூடாது என்று அவரது தாய் கதறினார்.
Recommended Video
சென்னை: அஸ்வினியை கொன்றவனை சும்மா விடக் கூடாது என்று அவரது தாய் கதறி அழும் காட்சி மனதை உருக்குகிறது. மேலும் தனது மகளின் உயிரை திருப்பிக் கொடு என்றும் அவர் உருக்கமாக கூறியுள்ளார்.
சென்னை கேகே நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் அஸ்வினி. இவர் நேற்று மதியம் கல்லூரி முடித்துவிட்டு வீடு திரும்ப வெளியே வந்தார்.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சற்று எதிர்பாராமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்வினியை வெட்டினார்.
விடாமல் துரத்திய இளைஞர்
வெட்டுபட்ட நிலையிலும் அஸ்வினி உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினார். ஆனால் விடாமல் விரட்டிய இளைஞர், ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் போன அஸ்வினியின் கழுத்தை வெட்டினார். இதில் நிலைக்குலைந்து கீழே விழுந்தார். அப்போது அவரை அங்கிருந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து துவைத்தனர்.
அழகேசன்
தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது அந்த இளைஞரின் பெயர் அழகேசன் என்று தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் அஸ்வினியின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
எப்படியெல்லாம் வளர்த்தேன்
தகவலறிந்து அஸ்வினியின் தாய் சங்கரி, சகோதரர் அபினேஷ், பெரியம்மா சரஸ்வதி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது தாய் சங்கரி செய்தியாளர்களிடம் கூறுகையில், அஸ்வினியின் தந்தை சாகும்போது அவருக்கு 5 வயது. அன்றிலிருந்து இன்று வரை வீட்டு வேலை செய்து மகளை காப்பாற்றினேன்.
சும்மா விட கூடாது
என் மீது அஸ்வினிக்கு பாசம் அதிகம். எங்கு போனாலும் என் கையை பிடித்துக் கொண்டே செல்வாள். இப்படி பொத்தி பொத்தி வளர்த்த மகள் இன்று என்னிடம் இல்லையே. அழகேசனை சும்மா விடக் கூடாது. அஸ்வினி இல்லாமல் நான் மட்டும் வாழ்ந்து என்ன பிரயோஜனம்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்தானே
இதுபோன்று கொடூரமாக கொலை செய்ய அவனுக்கு எப்படி மனம் வந்தது. அவனுக்கும் சகோதரிகள் உள்ளனர். அவனும் என்னை போல் ஒரு தாய் வயிற்றில்தானே பிறந்தான். அய்யோ கடவுளே என் மகளை உயிருடன் திருப்பிக் கொடு என்று சங்கரி கதறியதை காண்போரை உருகவைத்தது.