படகில் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதி.. கம்போடியாவில் அவதி
ஆஸ்திரேலியாவில் செல்ல முயன்ற இலங்கி அகதி கம்போடியாவிற்கு சென்றடைந்துள்ளார்.
சென்னை: இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு அகதியாக செல்ல முயன்றவர் கம்போடியாவிற்கு சென்றடைந்துள்ளார். கம்போடியா நாட்டில் சரியான பொருளாதார சூழல் இல்லாத நிலையில் அவர் அங்கு சென்றிருப்பதால் அவதிக்குள்ளாகியுள்ளார்.
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்த 3 அகதிகள் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு படகு வழியாக ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் பிடிக்கப்பட்டு நவுருத்துவின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, ஆஸ்திரேலியா-கம்போடியா நாடுகளுக்கிடையே உள்ள அகதிகள் ஒப்பந்தத்தின் படி அந்நாட்டில் குடியமர சம்மதம் தெரிவித்த மூன்று அகதிகள் கம்போடியா சென்றடைந்துள்ளனர். 'இந்த அகதிகளோடு அவர்கள் குடும்பத்தினர் கம்போடியாவில் தங்க விரும்பினால் குடியேறுவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்' என்று கம்போடிய குடியேற்றுத்துறையின் அகதிகள் அலுவலக தலைமை அதிகாரி டான் சோவிசியே தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆஸ்திரேலியா-கம்போடியா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி நவுரு தடுப்பு முகாமில் உள்ள அகதிகளை கம்போடியாவில் குடியமர்த்துவது என திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட கம்போடியாவுக்கு ஆஸ்திரேலிய அரசு சுமார் 50 மில்லியன் டாலர்களை கொடுத்தது.
அதே சமயம் அகதிகளை கம்போடியாவில் குடியமர்த்துவதற்கு அந்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் உள்ளது. கம்போடியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் வறுமை நிலையில் இருக்கும் பொழுது இங்கு அகதிகளை குடியமர்த்தப்படுவதை ஏற்க முடியாது என்கின்றனர். இந்த ஒப்பந்தத்தின்படி இதுவரை ஐந்து அகதிகள் கம்போடியாவுக்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கு வாழ முடியாததால் அதில் மூவர் சொந்த நாட்டிற்கே திரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையின்படி பார்த்தால் கம்போடியாவின் பொருளாதார நிலையும் சமூக நிலையும் ஒப்பந்தத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 1970 காலக்கட்டங்களில் அந்நாட்டில் உள்ள மக்கள் பெரும் இனப்படுகொலைக்கு முகம் கொடுக்கும் சூழல் ஏற்பட்டது. வன்முறையில் இருந்து மீண்டிருந்தாலும் அந்நாட்டின் சமூக நிலையிலோ பொருளாதார நிலையிலோ பெரியதொரு மாற்றம் இதுவரை ஏற்படவில்லை. ஆஸ்திரேலியாவின் பொருளாதார நிலையோடு ஒப்பிட்டால் கம்போடியாவின் நிலை ஒரு சதவீதம் என்று குறிப்பிடும் அளவில் கூட இல்லை. கம்போடியாவில் அகதிகள் குடியமர்த்தலுக்கு எழும் எதிர்ப்பிற்கு இவையெல்லாம் காரணமாக சொல்லப்படுகிறது.
கடந்த ஜூன் மாத கணக்குள்படி ஆஸ்திரேலியாவின் நவுரு தடுப்பு முகாமில் 442 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் 49 குழந்தைகள், 55 பெண்கள் உள்ளனர்.